Advertisment

அரசு மீது இ.டி வழக்கு தொடர முடியும் என்றால், இ.டி மீது அரசு வழக்கு தொடரலாம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்; இ.டி எங்கள் மீது வழக்கு தொடர முடியும் என்றால், நாங்கள் இ.டி மீது வழக்கு தொடரலாம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

author-image
WebDesk
New Update
Supreme court

கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்; இ.டி எங்கள் மீது வழக்கு தொடர முடியும் என்றால், நாங்கள் இ.டி மீது வழக்கு தொடரலாம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சட்டவிரோத மணல் விற்பனை வழக்கின் விசாரணையில் அமலாக்க துறைக்கு ஒத்துழைப்பு அளிக்காத தமிழக அரசின் தயக்கம் குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு (PMLA) மாநில அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள் என்று திங்கள்கிழமை வலியுறுத்தியது.

Advertisment

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 23 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்கள் எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும், அவர்கள் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 26) நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும், அரசியலமைப்பின் 256வது பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்றும், ஏதேனும் குற்றங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய அமலாக்கத்துறை உடன் ஒத்துழைப்பதால் என்ன பாரபட்சம் ஏற்படும் என்றும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது.

நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளித்த மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், முன்னறிவிப்பு குற்றங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என்றும், அனைத்து வழக்குகளையும் மத்திய ஏஜென்சி மூலம் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் விரும்பினால், நீதிமன்றம் பொது உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், “மணல் விற்பனை உள்ளிட்ட விவரங்களை அமலாக்கத் துறை கேட்டதால் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒரு பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்? சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? என்றும் தெரிவித்தனர்.

"முதலாவதாக, எந்த எஃப்.ஐ.ஆரிலும் தகவல் கோரப்பட்ட குற்றத்தின் வருமானம் இல்லை. இரண்டாவதாக, எந்த முன்னறிவிப்பு குற்றமும் இல்லை. எனவே, பிரிவு 50-ன் கீழ் நோட்டீஸ் வழங்குவது பற்றிய கேள்வி எழாது. மூன்றாவதாக, அமலாக்கத்துறை விசாரித்து வரும் பணமோசடி தொடர்பானது. முன்னறிவிப்பு குற்றங்களை விசாரிக்க PMLA-ன் கீழ் அதற்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று கபில் சிபல் வாதிட்டார்.

கபில் சிபலின் வாதத்தை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, பெஞ்சில் கடுமையாக எதிர்த்தார், மேலும், முன்னறிவிப்பு குற்றத்தை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை மற்றும் ஐ.பி.சி.,யின் பல்வேறு விதிகளின் கீழ் சட்டவிரோத மணல் அகழ்வு வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் பணமோசடி வழக்கு விசாரணையை மேற்கொள்ள அமலாக்கத் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசின் பதில் பதிவு செய்யப்படாததால், விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு முதலில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கபில் சிபல் வேண்டுகோள் விடுத்த போதிலும், நீதிமன்றம் அதை நிராகரித்து வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Enforcement Directorate Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment