தமிழகத்தில் 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் 890 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என தமிழ்நாடு முழுவதும் பல பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது.
குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது. இருப்பினும் தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்று தமிழக அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்திக் கடந்த ஆண்டு அறிக்கையும் வெளியிட்டது.
இதனை உறுதி செய்ய தமிழக அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் இது போன்ற சூழல் நிலவுவதால், அரசுக்குத் தேவையற்ற செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே 890 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்தும் வருகிறது தமிழக அரசு.
எனவே 890 தொடக்கப்பள்ளிகளின் இயக்கம் குறித்து விரைவில் ஒரு அரசாணையைத் தமிழக அரசு வெளியிடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.