Advertisment

டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம் எதிரொலி: ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து பற்றி முக்கிய ஆலோசனை

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்; ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து, பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு முக்கிய ஆலோசனை

author-image
WebDesk
New Update
Teachers protest

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணி பெற தனி தேர்வு எழுதும் நடைமுறை ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வரும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர்.

இதில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கையாக, டெட் தேர்வுக்கு பின்னர் அரசு பணிக்கான நியமனத் தேர்வு எனப்படும் தனித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதாக உள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வெயிட்டேஜ் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறையிலான பணி நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அம்முறை கைவிடப்பட்டது.

அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்துக்கு புதிய முறை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் பணி நியமனத்துக்காக மீண்டும் ஒருபோட்டித் தேர்வு நடத்தக் கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை சில காலமாக வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிப்பது, சலுகை மதிப்பெண் வழங்குவது, உள்ளிட்ட ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் அரசாணையை ரத்து செய்து, டெட் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதனை வலியுறுத்தி, கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தி, நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணி பெற தனி தேர்வு எழுதும் நடைமுறை ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நியமனத் தேர்வு எனப்படும் மறுதேர்வுக்கு காரணமான அரசாணை 149ஐ ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், ஊதிய உயர்வு கேட்டு போராடி வரும் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Teachers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment