/indian-express-tamil/media/media_files/lmaEU7CGceKMc2oXk9FD.jpg)
தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, தானாக முன்வந்து ஓய்வு பெற்ற, மற்றும் மறைந்த பணியாளர்களின் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்ற நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்காக, ஒரே நேரத்தில் ரூ.1,137.97 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அண்மைக் காலங்களில் போக்குவரத்துத் துறைக்கு ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை இது எனக் கருதப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்படி, இந்த நிதி மாநிலம் முழுவதும் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களுக்குப் பிரித்து வழங்கப்படும். இதில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.157.81 கோடியும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.54.41 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஜூலை 2023 முதல் ஏப்ரல் 2024 வரையிலான நிலுவைத் தொகைகளைக் கையாளும். போக்குவரத்துத் துறை முதலில் ஜனவரி 2025 வரை உள்ள நிலுவைத் தொகையைச் செலுத்த ரூ.2,450.83 கோடியைக் கோரியிருந்தது. தற்போது, அரசு இதில் கணிசமான பகுதியை உடனடியாக விடுவித்திருப்பது, முன்னாள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குப் பெரிய நிதிச் சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்கள் (ஊழலைத் தடுப்போம்) சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. அன்பழகன் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். "பல ஓய்வு பெற்ற ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்காகக் காத்திருக்கின்றனர். ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், பலருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்து, சிலர் தங்கள் பணத்தைப் பெறுவதற்கு முன்பே காலமானனர். இந்த நிதி, மருத்துவச் செலவுகள், திருமணம் அல்லது கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்குப் பெரிதும் உதவும்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சுமார் இருபது ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இந்த ஒதுக்கீட்டின் மூலம் தலா ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "முன்பெல்லாம் இந்த நிலுவைகள் ரூ.150-200 கோடி எனச் சிறிய பகுதிகளாகச் செலுத்தப்பட்டன. ஆனால், இந்த முறை அரசு தொகையை ஒரே தவணையில் வழங்கியிருப்பது மிகப்பெரிய நிம்மதியைத் தருகிறது. நிலுவையில் உள்ள 14 மாத அகவிலைப்படி மற்றும் 2023 ஊதிய மாற்றத்தின் ஒன்பது மாத நிலுவைத் தொகை போன்றவற்றை விரைவில் அரசு விடுவிக்கும் என்று நம்புகிறோம்," என்றும் அன்பழகன் கூறினார்.
போக்குவரத்துத் துறைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடாக் சிரு, அனைத்து போக்குவரத்துக்கழகங்களின் நிர்வாக இயக்குநர்களையும், ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விநியோகிக்கவும், ஒரு வாரத்திற்குள் அதன் விவரங்களைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிதி முன்பணமாக(Ways and Means Advance) ஆக பெறப்பட்டு, பின்னர் 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு / இறுதி மாற்றியமைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் முறைப்படுத்தப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் செலவு துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்படும். போக்குவரத்து மற்றும் நிதித் துறைகள் இணைந்து இந்த விநியோகத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.