/indian-express-tamil/media/media_files/2025/10/15/covai-rain-3-2025-10-15-06-22-27.jpeg)
தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் மழையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் பல்வேறு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் தாக்கத்தால், அக்டோபர் 19 முதல் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை நீடிக்கும் என்றும், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரேபியக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் இரண்டு வானிலை அமைப்புகளுக்கு இடையேயான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவில் நிலவும் மற்றொரு சுழற்சியும் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தீவிர மழைக்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, அக்டோபர் 19 (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி முந்தைய தினம் தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 20 அன்று டெல்டா மற்றும் வட கடலோரப் பகுதிகள் உட்பட சுமார் 20 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தென் தமிழகத்தில் தீவிரமாகப் பெய்த மழை, அக்டோபர் 22 முதல் வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 21-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அக்டோபர் 23-ஆம் தேதிக்குள் இது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அக்டோபர் 22 முதல் 24 வரை இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தால் வட கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவர் திருமதி. பி. அமுதா தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 22 மற்றும் 23 சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் உட்பட ஆறு மாவட்டங்களில் 24 செ.மீ வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் இந்த பல்வேறு அமைப்புகளுக்கு, வடகிழக்குப் பருவமழையின் தீவிரமும் துணை நிற்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் (சனி கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நேரம்) ஐந்து வானிலை மையங்களில் மிகக் கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18 செ.மீ மழை பதிவானது, இது மாநிலத்திலேயே அதிகபட்ச மழையாகும். இன்றும் (சனிக்கிழமை) இதேபோன்ற மழைப்பொழிவு தொடர்ந்தது.
வானிலை அமைப்புகள் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால், தீவிர மழை ஒரு மாவட்டத்தில் இருந்து அதன் அண்டை மாவட்டங்களுக்கும் பரவக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us