தமிழ்நாட்டில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. கோடைக்காலத்தின் வெப்பம் தணிந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜூலை 20) முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 23 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், 22-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.