/indian-express-tamil/media/media_files/2025/01/31/zmIzlJR5dpGHENNfxNIa.jpg)
குறிப்பிட்ட காலத்திற்குள் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், காவல்துறையினர் பதிவு செய்யும் குற்ற வழக்குகளில், புலன்விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து, இன்று (ஜன 31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இன்று மாலை 4.30 மணிக்குள் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதனடிப்படையில், மாலை 4:30 மணிக்கு தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜரானார். அதன்படி, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளரிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.
குறிப்பாக, காவல்துறையில் நடப்பதை தெரியப்படுத்துவதற்காகத்தான் உள்துறை செயலாளரை ஆஜராக உத்தரவிட்டதாகவும், அவரை நீதிமன்றத்திற்கு வரவழைப்பது நோக்கம் அல்ல எனவும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.