By: WebDesk
Updated: January 25, 2020, 12:23:33 PM
Tamil Nadu, Kerala plan joint study at Keeladi and Muziris
Tamil Nadu, Kerala plan joint study at Keeladi and Muziris : தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாய்வுகளின் போது கிடைக்கும் தொன்ம ஆதாரங்கள் யாவும் பெரும்பாலும் ஒன்றாக இருப்பது சகஜமான ஒன்றாகும். தற்போது இவ்விரு மாநிலங்களின் அரசுகளும் ஒன்றிணைந்து அகழ்வாய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. கேரளத்தின் கொடுங்கலூரில் இருக்கும் முசிறிப்பட்டினம் மற்றும் சிவகங்கையில் அமைந்திருக்கும் கீழடி பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கதகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் தமிழக தமிழ்த்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் இருவரும் தலைமைச் செயலகத்தில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். முசிறிக்கும் கீழடிக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து வெகுநாட்களாகவே அகழ்வாராய்ச்சியாளர்கள் தகவல்கள் தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இரண்டு மாநிலமும் ஒன்றாக இணைந்து இந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளது.
பாண்டியராஜன் இது குறித்து கூறூம் போது, கீழடியைப் போன்றே முசிறியிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கீழடி மற்றும் முசிறியை இணைக்கும் புள்ளியில் ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டால் அதன் மூலம் தமிழ் நாகரிகம் குறித்த முழுமையான தகவல்களை நம்மால் ஆராய முடியும். தமிழ் நாகரிகம் குறித்து புத்தகங்களை வெளியிடும் பணியும் தொடர்ந்து தொய்வின்றி மற்றொரு பக்கம் நடைபெற்று வரும். அதனால் புத்தக வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதை தடுக்க இயலும் என்றும் பாண்டியராஜன் அறிவித்தார்.
கேரள வரலாற்று துறை கவுன்சில் உறுப்பினர்கள் பி.ஜே.செரியன் தலைமையில் கீழ் பட்டனம் பகுதியில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகள் மூலமாக சங்க காலம் குறித்தும், தமிழ் மக்களின் வரலாறு குறித்தும் நம்மாள் அறிந்து கொள்ள இயலும். கீழடி அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட பொருட்கள் முசிறியில் இருந்து பெறப்பட்ட பொருட்களுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் டி. உதயச்சந்திரன் அறிவித்தார்.
கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. 6ம் கட்ட ஆராய்ச்சி தற்போது துவங்கியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் கண்ணகி கோவிலை எளிதில் அடையும் வகையில் சாலைகள் அமைக்குமாறும், அதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வழி வகை செய்ய வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் பாண்டியராஜன் அறிவித்தார்.