/tamil-ie/media/media_files/uploads/2022/11/chembarambakkam-feature-1.jpg)
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
தமிழகத்தில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வழக்கத்தை பாதிக்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள ஏரிகளில் நீர் அளவு அதிகரித்தது. இது வெள்ளப்பெருக்கை அதிகரிக்கும் அபாயம் இருந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
ஆனால், ஏரிகளின் நீரளவில் சரிவு காணப்படுகிறது. நேற்று சோழவரம் ஏரியில் 211 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 177 கனஅடியாக சரிவடைந்துள்ளது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 273 மில்லியன் கனஅடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணன்கோட்டை ஏரியில் நேற்று 125கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 120 கனஅடியாக சரிவடைந்துள்ளது.
பருவமழையின் காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளதால், மக்களின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. மழைநீர் ஏரியில் இருந்து திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 642 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2850 மில்லியன் கன அடியாக நிரம்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக விடாமல் பெய்துவரும் கனமழையின் காரணத்தால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.