/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1029.jpg)
Tamil Nadu news today live updates,
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வரும் ஜூன்.28ம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜன.2ம் தேதி கூடியது. ஜன.4 முதல் 8ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 8ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 11 முதல் 14ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு, தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் ஜூன்.28ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். பேரவை கூடும் நாளில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும். அன்றைய தினமே, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி அவையை எத்தனை நாட்களுக்கு கூட்டுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது. மரபுப்படி 25 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும்.
இந்த கூட்டத்தொடரில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை, உள்ளாட்சி தேர்தல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், விவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.
இதுதவிர, கடந்த ஏப்ரல் மாதம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்திருந்தார். எதிர்வரும் கூட்டத்தொடரில் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற காத்திருக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.