மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி, சட்டமன்ற காங். தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
அதில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகளை எந்த நாளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, கட்சிகளின் உறுப்பினர்கள் பேசும் நேரம், கவன ஈர்ப்பு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும். அதில், சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும். அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் இடம் பெறும். மறைந்த உறுப்பினர்களுக்கு 28ம்தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 29, 30ம் தேதி அரசு விடுமுறை.
ஜூலை 1ம் தேதி வனம், சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
ஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
ஜூலை 3ம் தேதி கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
ஜூலை 4ம் தேதி எரிசக்தி துறை, ஆயத்தீர்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.