தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 20000ஐ தாண்டிய நிலையில் நேற்று 26,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 200ஐ நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முனைப்பில் புதிய ஊரடங்கு விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த முழு ஊரடங்கானது மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் அனைத்துப் பணிகளுக்கும் அனுமதி
மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட விருப்பதை முன்னிட்டு, பொது மக்களும் நிறுவனங்களும் தமக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும் பொருட்டு, இன்று சனிக்கிழமை (08.05.2021) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (09.05.2021) இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவை
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் சலூன் கடைகள் இயங்க அனுமதி
இதேபோல், இன்றும் நாளையும் மட்டும் சலூன் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். இவை தவிர பிற கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி உண்டு முழு ஊரடங்கிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு தமிழக அரசு ஊரடங்கு விதிகளை அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil