/indian-express-tamil/media/media_files/2025/05/22/bUuCMN0WoSvt6weNKNQi.jpg)
எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என கோவையில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை ஆர்.எஸ் புரத்தில், ஆவின் சார்பில் பன்னீர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடந்தது.
இதை அமைச்சர் திறந்து வைத்த அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது;
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த முறை கோவை வந்த போது பன்னீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை திறந்து வைத்தார். தற்போது அந்த தொழிற் சாலையில் உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது.
கோவை மக்கள் கோரிக்கையை ஏற்று பன்னீர் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று பால் மற்றும் பால் உபப் பொருட்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் விநியோகத்தை ஆவின் விநியோகம் செய்து வருகிறது. முதலமைச்சர் ஆலோசனையால் ஆவின் வளமான துறையாக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு நான் அமைச்சராக இருந்த போது ஆவின் டிலைட் என்ற பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த பாலை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
தனியார் பால் விலையை நிர்ணயம் செய்வதை பால்வளத் துறை செய்ய முடியாது. ஆனால் எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும் ஆவின் பக்கம் மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேண்டும். தனியார் பால் கொள்முதலில் சீசனுக்கு தகுந்தார் போல் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் ஆவின் விலை எப்போதும் நிரந்தரமானது. எனவே அனைத்து விவசாயிகளும் ஆவின் பக்கம் வர வேண்டும் என்று அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏதாவது புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தால் அதை சரி செய்ய வாட்ஸ் அப் (whatsapp) குழு அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 40 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி பெற்றுத் தருவார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் விபரங்கள் சரியல்ல. இதற்கு முன்பு அவர்கள் 10 ஆண்டுகளாக சென்று பங்கேற்ற கூட்டத்தில் அப்படித் தான் செயல்பட்டார்கள்? தமிழக முதல்வர் தமிழக உரிமை விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய மாட்டார். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பவன் குமார், முத்துக்குமார் மாவட்ட செயலாளர் கார்த்திக், ஏர்போர்ட் ராஜேந்திரன், மற்றும் ஆவின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.