scorecardresearch

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை பா.ஜ.க அரசியலாக்க வேண்டாம்; அமைச்சர் மா.சு

தமிழகத்தில் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் சீரழிந்துவிட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு; அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் கருத்துகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை பா.ஜ.க அரசியலாக்க வேண்டாம்; அமைச்சர் மா.சு

சமீபத்தில் சென்னை மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதையடுத்து மரணமடைந்த கால்பந்து வீராங்கனை ஆர் பிரியா (17) மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை பா.ஜ.க.,விடம் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற பொதுநல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், செவ்வாய்கிழமை காலை பிரியா இறந்தது தொடர்பான மருத்துவக் குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்: பதிவுத் துறைச் சேவைகளை இனி எளிதாக பெறலாம்; சென்னை, கோவையில் சேவை மையங்கள்

பிரியாவுக்கு சிகிச்சையளிக்கும் போது அலட்சியமாக இருந்ததாகக் கூறி அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட இரு மருத்துவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் தலைமறைவானால் அவர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சென்னை புறநகரில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா, பி.எஸ்.சி உடற்கல்வி படித்து வந்தார். நவம்பர் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அவரது முதல் முழங்கால் தொடர்பான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் புகார்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் “அறுவை சிகிச்சை தோல்வி அவளைக் கொன்றது” என்று குற்றம் சாட்டினார்கள்.

ப்ரியா நவம்பர் 8 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் மற்றும் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், ஆனால் அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து பல உறுப்புகள் செயலிழந்ததால் செவ்வாய்க்கிழமை காலை இறந்தார்.

“மருத்துவக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நோயாளியின் முழு அறிக்கையும் ஓரிரு நாட்களில் கிடைக்கும்” என்று அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் சீரழிந்துவிட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் கருத்துகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

”சமீபத்தில் குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது கடவுளின் செயல் என பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாங்கள் தப்பிப்பதற்காக இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதில்லை. மருத்துவ அலட்சியத்தால் நடந்த சம்பவம் என்பதை ஏற்றுக்கொண்டு, மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தோம். விசாரணை நடந்து வருகிறது. அவர்களைப் போல (பா.ஜ.க) நாங்கள் தப்பிக்க முயற்சிக்க மாட்டோம், உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்வோம், ”என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த முறையை சீர்திருத்த வேண்டும், ஊழலைக் களைய வேண்டும், அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் பணியைத் தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை தொடர் ட்வீட்களில் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

“எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்று உங்கள் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கனவை எங்களுக்கு விற்காதீர்கள். மற்றொரு அப்பாவி குழந்தை இழக்கப்படாமல் இருக்க இப்போதே செயல்படுங்கள்” என அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu minister subramanian footballers death