தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜன.11) காலை அரசு தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு அமைந்ததையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம் தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் இருந்து கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சி.பி.ஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி இருந்தார். 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து தனித்த முறையில் வழக்கறிஞராகச் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,
மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராகப் பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் அனுப்பபட்டது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் இன்று (ஜன.11) காலை பொறுப்பேற்கிறார். அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பி.எஸ். ராமன் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“