Tamil Nadu news in tamil :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழைவையொட்டி வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். பின்னர் அவற்றை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பார்கள். சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஆயிரக்கணக் கான சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதுண்டு.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 10.9.2021அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் (செப்டம்பர் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை) உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.
எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையை கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை ஊர்வலத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது, செப்டம்பர் 15 வரை தமிழ்நாட்டில் அனைத்து மத விழாக்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகும்.
சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மற்றும் பிற இடங்களில் உள்ள தேவாலயங்களில் செப்டம்பர் 8 -ம் தேதி அன்னை மேரியின் பிறந்த நாள் திருவிழாவை கொண்டாட தடை விதிக்கப்படுகிறது.
தனிநபர்கள் சில இடங்களில் அல்லது கோவில்களுக்கு அருகில் தங்கள் சிலைகளை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படும். அவற்றை நெடுஞ்சாசலை துறையினர் முறையாக அகற்றுவார்கள் .
பொது இடங்களில் மத ஊர்வலங்கள், திருவிழாக்கள் மற்றும் ‘உறியடி’ போன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil