Tamil News: கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, முக்கிய இடங்களில் நகைக் கடைகள், நகை பட்டறைகள் மறுஉத்தரவு வரும்வரை மூட மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், " நாடு முழுவதும் சோதனைக்கூடங்களின் கட்டமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், இந்தச் சாதனை சாத்தியமாகியது என்று தெரிவித்தது, மேலும், 1105க்கும் அதிகமான சோதனைக்கூடங்கள், மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக இயங்கி வருகின்றன. அரசுத் துறையில் 788 ஆய்வுக்கூடங்களும், தனியார் பிரிவில் 317 சோதனைக்கூடங்களும் இயங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today Updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இங்கே காணலாம்.
மருத்துவர்களுக்காக பருத்தியால் ஆன முழு கவச ஆடையை திருப்பூர் தனியார் பின்னலாடை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும், பிபி கிட் எனப்படும் முழு கவச ஆடைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால், அணியும் போது காற்று உட்புகாமல் மிகவும் அசௌகரியமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்று, பருத்தி துணியில் முழு கவச ஆடைகளை தயாரித்துள்ளது. இந்த ஆடை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஏதுவாக உள்ளதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அரியலூர் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் திருமாவளவனை வேண்டுமென்றே நிராகரிக்கவில்லை
* கொரோனா காலம், காணொலி காட்சி மூலம் அடிக்கல் என்பதால் அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம்;
திருமாவளவன் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்
- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நான்கு இடங்களில் நடந்தன. அவற்றுள் கொந்தகையில் நடந்து வரும் பணிகளில் முதுமக்கள் தாழிக்கள் கண்டுபிடித்த நிலையில், அதிலிருந்து எழும்புக் கூடுகள் மண்டை ஓடுகள், கை, கால் எழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்தச் சூழலில், இன்று மாலை மற்றொரு இடத்தில் அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தன. குழந்தையின் முழு எழும்புக் கூடு தெரிய வரவே, மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எழும்புக் கூட்டை சேதாரம் இல்லாமல் எடுக்க முயன்றனர். அதனால் முழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதாரம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு சுமார் 95 செ.மீ நீளம் இருந்துள்ளது.
சென்னை கிண்டி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிநவீன வசதிகள்
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக் கூடம்
யோகா செய்ய வசதி, வைஃபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை
- முதல்வர் பழனிசாமி
கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது
சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன
அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் போக்க பிரத்யேக யோகா மையம்
எய்ம்ஸ் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையானது, கிங்ஸ் மருத்துவமனை
- முதல்வர் பழனிசாமி
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தடைபட்டு உள்ள சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவது தொடர்பாக விரைவில் விதிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம், பிக்கி பிரேம் 2020 கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது . உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்குடன் திமுகவின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோல் 13 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில் திமுகவின் மனுவையும் சேர்த்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தியாவில், OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு கோரி, சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனை சுட்டிக்காட்டி, தமிழக மருத்துவ கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், 50% OBC பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 9ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் 27% கோரிய வழக்குக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பதால், OBC பிரிவினருக்கு 50% கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மனுவில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த மனுவையும், மருத்துவ மாணவர் டி.ஜி பாபு தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு ஜூலை 9-ஆம் தேதி விசாரிக்கிறது.
திருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமகவே முன் வந்து விசாரணையை துவக்கியுள்ளது. திருச்சி அதவத்தூரை சேர்ந்த 14 வயதான சிறுமி நேற்று மாலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என அதில் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் குணமாகிவிட்டனரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை ராயபுரத்தில் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டனர் என்றும், குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தி ல் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்த நிலையில், முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சி.பி.ஐ.
தூத்துக்குடியில் எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவந்ததை சேலம் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தவர் மீது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் மூலம், அந்த தெருவில் வசிக்கும் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வந்த புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னையில் இன்று 26 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - 10 பேர் ;
ஸ்டால்னி மருத்துவமனை - 7 பேர்;
ஓமந்தூர் அரசு மருத்துவமனை - 4 பேர் ;
கீழ்பக்கம் அரசு பொது மருத்துவமனை - 4 பேர்;
தனியார் மருத்துவமனை - ஒருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.
ஜூலை 7, காலை 9 மணி நிலவரப்படி,
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை - 70,017
குணமடைந்தோர் எண்ணிக்கை - 44,882
தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை - 24,052
உயிரிழப்பு - 1,082
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பதற்காக 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன கருவியின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தெற்கு மாவட்ட செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி இல்ல திருமண விழாவின் போது அனுமதியின்று பேனர் வைத்ததாக அதிமுகவினர் 2 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த ஜூலை 3ம் தேதி வி.என். ரவியின் மூத்த மகள் வி.என்.ஆர். ரூபிகா திருமணம் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரேசில் கொரோன பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உள்ளூர் மட்டத் தலைவர்களின் நடவடிக்கையை இவர் கடுமையாக விமர்சித்து வந்தவர். மேலும், கொரோனா பெருந்தொற்றை விட பொது முடக்கநிலையால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையானது என்றும் தெரிவித்தார். பிரேசிலில் மட்டும் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் 65,000-ஐ தாண்டியது/
அமெரிக்கா குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்கா கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் சர்வதேச மாணவர்களுக்கு, அடுத்த செமஸ்டர் பாடத்திட்டங்களை ஆன்லைனில் மூலம் பயில திட்டமிட்டிருந்தால், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்தது.
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய உயர்கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இறுதி கல்வியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறியது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிர்த்து 978 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று கட்டுப்பாட்டுப்பணிகள் தொடர்பாக 15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights