Tamil Nadu news today live updates: தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான முதல் டி20 மழையால் கைவிட்ட பின்னர் பின்னர், இன்று மொஹாலியில் 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2 வது டி 20 போட்டி நடக்க விருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணி அளவில் இந்த போட்டி தொடங்க விருக்கிறது.
சென்னையில் பெட்ரோல் விலை 27 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.75.26-க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.69.57-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் உயரும் என சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னை நடக்கும் அரசியல் நிகழ்வுகள்,தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் போன்ற தகவல்களை இங்கே உடனுக்குடன் காணலாம்.
முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த இலக்கை எட்டிப் பிடித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி இறுதிவரை அவுட்டாகாமல் 72 ரன்கள் குவித்தார் இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என முன்னிலை வகிக்கிறது இந்தியா.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம். ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நீதிபதி ராமசுப்ரமணியன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில், மாணவர் உதித் சூர்யா உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களைக் கைது செய்ய ஆண்டிப்பட்டி காவல் ஆய்வாளர் உஷா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுத அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய நடைமுறை வரும் 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணையில் அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், இதுவரை 34 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, 13 பேர் இன்னும் காணவில்லை, 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. நர்சரி, பிரைமரி உள்ளிட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம். அதற்கு அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, இந்தி திணிக்கப்படாது. நான் மத்திய அரசின் பிரதிநிதி. மத்திய அரசு எந்தவகையிலும் இந்தியை திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அதனால், திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது” என்று கூறினார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ், தனது கதையை பயன்படுத்தி காப்பான் படம் எடுக்கப்பட்டதால் படத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டிய அவசியம் குறித்துஉள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து சர்ச்சையான நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் “பொதுமொழி பற்றிய எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பிறமொழி ஒன்றை கற்க வேண்டுமானால் இந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். நான் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவன். நான் எப்போதும் சொல்வது போல, இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும்; தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது அவர்களின் அறக்கட்டளை சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தும் படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை
கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு ஒன்றினை பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இம்மாத துவக்கத்தில் அவரை கைது செய்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரு தரப்பினரும் கூறுகின்ற நிலையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி. கனிமொழி, அந்த தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் சந்தானகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். இவ்விரு வழக்குகளையும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் கனிமொழி தரப்பினர் தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் உத்தரவு.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் தன் குடும்பத்தினர் உதவியுடன் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழ் இனம் வேறு, தமிழ் மொழி வேறல்ல, தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ் மொழி தான் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 18, 2019
கல்லூர் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் இ-சிகரெட் பழக்கம் மிகவும் அதிகமாக அதிகரித்து வருகிறது என்றும், அதனால் அவர்கள் அளவுக்கு அதிகமாக பாதிப்பு அடைவதாலும் இ-சிகரெட் ஏற்றும்தி, இறக்குமதி மற்றும் தயாரிப்புக்கு தடை விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை பதிவு செய்த போது தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அவரை அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் குடியாத்தம் பகுதியில் அமைந்திருக்கும் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் அடித்து அழித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர் திமுகவினர். திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 22 நபர்களும் மத்திய அரசை கண்டித்து இந்தியை திணிக்காதே என்று கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . குறிப்பாக, திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது .
சென்னையை சேர்ந்த மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக சில நாட்களுக்கு முன் புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வர் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாகவும், மேற்படி விசாரணை நடந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது .
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினி காந்த, " பொதுவான மொழி ஒன்று இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமைக்கு நல்லது , ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டின் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது, இந்தியை திணித்தால் தமிழகம் மட்டுமல்லாமல், வடநாட்டு மக்களும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் . காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில், 16க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன. போலிசாரின் கவனக் குறைவே இதற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளர் .
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் சிக்கி கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார் . மறைந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார் . மேலும், திமுக சார்பில் அக்குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
70 வருட சுதந்திர இந்தயாவில் பலகட்சி ஜனநாயக முறை தோல்வியில் முடிந்துள்ளதாக அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து மிகவும் முரணானது என்று எதிர்க்கட்சி தலைவர்களும், அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீனா போன்ற ஒத்தக்கட்சி சர்வாதிகார ஆட்சியை அமித் ஷாவின் கருத்து வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்துத்துவ சித்தாந்தவாதியான வீர் சாவர்க்கர் சுதந்திரம் வாங்கிய காலத்தில் பிரதமாராக இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே உருவாகி இருந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க நாங்கள் என்றுமே போராடுவோம் . காந்தி, நேரு வழியில் சாவர்க்கருக்கு இந்திய அரசியலில் இடம் கிடைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
பொருளாதார மந்த நிலை அடைந்து வரும் நிலையில் , கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க வைக்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் திட்டத்தில் அதிக பணத்தை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இதன் மூலம், நூறு நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத்தை ஆண்டுதோறும் பணமதிப்போடு இணைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஒற்றை நாட்டிற்கு ஒற்றை மொழி (இந்தி) இருந்தால் தான் அந்நிய மொழிகளுக்கு நம் நாட்டில் இடம் இருக்காது என அமித் ஷா இந்தி திவாஸ் அன்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிராக தமிழகம் உட்பட பல மாநிலத் தலைவர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு இருந்தனர். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "அமித் ஷா வின் கருத்து மாநில மொழிககளின் அடிப்படையை கேள்வி கேட்பதாகவும், அழிக்க நினைப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீண்டும் பேசியுள்ளார்.. சிவகங்கையில் நடைபெற்ற பிரதமர் மோடி பிறந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.சில நாட்களாகவே, ஹெச். ராஜா இது போன்ற கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது
இந்த மாத தொடக்கத்தில் ரஷ்ய நகரமான விளாடிவோஸ்டோக்கில் ஒரு பொருளாதார மன்றத்தின் போது மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, "ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க இந்தியப் பிரதமர் கூறவில்லை" என்று தெரிவித்திருந்தார். நேற்று, இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மகாதீர் முகம்மது கூற்றுக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது "ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க இந்தியா தரப்பில் எந்த கோரிக்கையும் தன்னிடம் வைக்கவில்லை" என்று மீண்டும் தெரிவித்து உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து வரும் செப்டம்பர் 20ம் தேதி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வானில் இருந்தே 70 கி.மீ., சென்று வானில் உள்ள ஏவுகணையை தாக்கி அழிக்கும் அஸ்ட்ரா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்தது டிஆர்டிஓ.
பாகிஸ்தானில் லர்கானா பகுதியில் செயல்பட்டு வரும் பிபி ஆஷிபா மருத்துவ கல்லூரியில், இறுதியாண்டு படித்து வரும் சந்தானி நேற்று அக்கல்லூரியின் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்து சிறுபான்மையினரின் உரிமைகள் பாகிஸ்தானில் பறிக்கப்படுவதாக கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights