Tamil Nadu news today updates : தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக சொந்த ஊருக்கு சென்றிருக்கும் அவருக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் 24 காவல் ஆய்வாளர்களை இட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து, வரும் 20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீருக்கு சென்று, நிலைமையை ஆய்வு செய்வேன் என ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 30-ம் தேதி குண்டு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and rainfall : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோவுடன் சேர்ந்து நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக் ட்வீட் செய்துள்ள இஸ்ரோ, எங்களுடன் துணைநிற்பதற்கு நன்றி. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம் என தெரிவித்துள்ளது.
விஜய் - அட்லீ 3வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். தீபாவளி விருந்தாக உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், படக்குழு, மீண்டும் ஒரு போஸ்டரை இன்று ( செப்டம்பர் 17ம் தேதி) வெளியிட்டுள்ளது. புது போஸ்டர் வந்தநாளையே, விஜய் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மத்திய அரசின் திட்டமாகும். 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். பொதுத்தேர்வு திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசிடம் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் காவல்துறையினர் கேட்கும் பட்சத்தில் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இதுதொடர்பாக, வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்த தமிழ்நாடு பார்கவுன்சில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அக். 1ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக, டி.கே. சிவக்குமார், சிபிஐயால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, ஒருநாள் அது இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைக்கப்படுவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, விரைவில் அரசாணை வெளியிடுவார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்துத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதிய பலன், ஆயிரத்து 97 கோடி ரூபாய் இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற பாதுகாப்புக்குழு முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளது . இந்த ஆலோசனையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல்துறை உயர் அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப். கமாண்டண்ட் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 20ம் தேதி தண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிரான மனோகரனின் மறுஆய்வு மனு மீதான விசாரணை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு இன்று வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பாமக கூட்டங்களில் இனி பேனர்கள் வைக்க கூடாது, சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என பாமக தலைவர் ராமதாஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். பல்லாவரத்தில் அதிமுக பேனர் விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பென் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் நடிகர்களும் இதுப் போன்ற அதிரடி கோரிகைகளை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைத்துள்ளனர்.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்படிருந்த நிலையில் தற்போது மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் என்ற வகையில் 308 பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு மரியாதையென்பது
அதிக கௌரவத்திற்குரியது!
நன்றி மாண்பு மிகுந்தவருக்கு! pic.twitter.com/bV3FQxvfot— R.Parthiban (@rparthiepan) September 17, 2019
இயக்குனர் பார்த்திபன் நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்திற்கு அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது வாழ்த்துக்களை கூறி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு பார்த்திபன் நன்றி கூறியுள்ளார்.
10, 11, 12 காலாண்டுத்தேர்வு வினாத்தாகள் ‘ஷேர் சாட்’ ஆப்பில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. நேற்று 11-ம் வகுப்பு வணிகவியல் தேர்வு நடந்த நிலையில், நேற்று முன் தினமே இதற்கான வினாத்தாள் ஷேர் சாட்டில் வெளியாகியிருக்கிறது. இன்று நடந்த கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வின் வினாத்தாளும் முன்னரே லீக் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம்சந்தேக மரணம் என 174 பிரிவின் கீழ் போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர். மின்கம்பம் சரிந்து விழுந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சந்தேக மரணமாக இருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.
2 ஜி தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஓ.பி. சைனி இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருப்பது தான் இதற்கு காரணம்.
அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது. இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது, மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும். தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும், இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது" என கோபிசெட்டிப்பாளையத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலக் கட்சி என்ற பெருமைக்குரிய, திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 70-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #DMK70
இனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம்!
வாழ்க திமுகழகம்! வெல்க தமிழ்! pic.twitter.com/a9Z6a9eOau
— M.K.Stalin (@mkstalin) September 17, 2019
இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம், பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி வழியில் தமிழை காத்திடுவோம் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ”தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான். யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் செப். 20-ல் அணிவகுப்போம் . வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று அந்த கடித்தத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தில் சாலையோரத்தில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். மின்வாரியத்தின் அலட்சியம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரிய வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸின் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ-ன் வீட்டிற்கு சென்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது என்றும், பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக டெல்லியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் உயர்நீதிமன்ற போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்ததைத் தொடர்ந்து ட்விட்டரில், ’பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்’ எனப் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள்.
தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா!
பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்!வாழ்க பெரியார்! #HBDPERIYAR pic.twitter.com/pHGxgBa4GE
— M.K.Stalin (@mkstalin) September 17, 2019
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, 'இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
On behalf of the Dravida Munnetra Kazhagam, I wish Hon'ble Prime Minister Thiru @narendramodi a very happy birthday and many more years of public service #happybirthdaynarendramodi
— M.K.Stalin (@mkstalin) September 17, 2019
தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்டாலினுடன் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயார். ஆனால் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கூறினார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு 'டெண்டர்' விடப்பட்டிருந்தது என்பதை நாம் அறிவோம், இந்நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி- உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்து விட்டது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights