/tamil-ie/media/media_files/uploads/2019/11/Kamal-Rajini-2.jpg)
Tamil Nadu News Today Updates
Flash News in Tamilnadu Today Updates: நாடாளுமன்ற இரு அவைகளின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடாமல், மக்களின் நம்பிக்கை மற்றும் இதயத்தை வெல்ல முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ராஜ்யசபாவின், 250வது கூட்டத் தொடரை முன்னிட்டு, ராஜ்யசபாவில், பிரதமர் மோடி பேசியதாவது:தேசிய வளர்ச்சியில், ராஜ்யசபாவின் பங்கு மிக முக்கியமானதாகும். 'ராஜ்ய சபா என்பது இரண்டாவது சபை தான்; ஆனால், இரண்டாம் நிலை சபை அல்ல' என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன்.நாட்டின் ஜனநாயக மரபை காப்பாற்றும் வகையில், இந்த சபையில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.சமீபத்தில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது உட்பட, பல உதாரணங்களை கூறலாம். நாட்டின் நலன் என்று வரும்போது, ராஜ்யசபா முந்திக் கொள்ளும். முத்தலாக் மசோதா நிறைவேறாது என, கூறினார்கள். ஆனால், ராஜ்யசபா அதை நிறைவேற்றியது.அதே நேரத்தில், விவாதிப்பது, முடக்குவது ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்த சபை செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி, டிசம்பர், 2ல் அறிவிக்கப்படும் என்றும், டிச.13க்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும், மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அடுத்த மாதம் 2ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும். டிச. 13க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்' என, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில், பொதுமக்களின் நன்மைக்காக சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோத்தபயாவை, கொழும்புவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஜெய்சங்கர் அளித்தார்.
இதையேற்ற கோத்தபயா, இந்தியாவுக்கு வரும் 29ம் தேதி வருகை தர ஒப்புக் கொண்டார்.
'கமல்ஹாசனுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்' என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தேவை ஏற்பட்டால் ரஜினியுடன் இணைய தயார் என்று கமல் கூறியிருந்த நிலையில், தற்போது ரஜினியும் அதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் அரிசி பெறக்கூடிய வகையில் குடும்ப அட்டைகளை மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை,குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26-ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலித்து அரிசி அட்டைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் உறவினர்களிடம் குழந்தையை காட்ட ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக லஞ்சம் கேட்டதாக நர்ஸ் கார்த்திகா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் சங்குமணியிடம் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்குமணி, உறுதி அளித்துள்ளார்.
நீட் ஆள் மாறாட்ட வழக்கில் தொடர்புடைய சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் அவரின் மகன் ரிஷிகாந்த் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு அனுமதி சீட்டில் மாணவனின் புகைப்படம் மாறியுள்ளதாக கூறி நீட் தேர்வு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. இதைக்கேட்டுக்கொண்ட நீதிபதி மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதுவரை மாணவன் மற்றும் அவரின் தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சேலம் - ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள், முழக்கம் எழுப்பினர்.
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவித்த நிலையில், 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 48 வயதான தந்தை, கல்லீரல் செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொறியியல் மாணவியான இவருடைய மகள் தமது தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கல்லீரலை தானமாக கொடுத்த அந்தப் பெண் குணமடைந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கஜா புயல் பாதித்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அப்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் வருவாய் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2019ல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு. இயற்கைச் சீற்றங்களால் 15,729 கால்நடைகள் உயிரிழப்பு. 8 லட்சம் வீடுகள் சேதம். தமிழகத்தில் விளைநிலங்களின் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கும் வீடுகள், பாஜகவின் அலுவலகமான கமலாலயம் ஆகியவை பஞ்சமி நிலத்தில் இருப்பதாக யாராவது புகார் அளித்தால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க முன்வருமா?"
- திமுக அமைப்பு செயலாளர்
திரு.@RSBharathiDMK MP அவர்கள் கேள்வி.#DMK pic.twitter.com/xE84W6oddv— DMK (@arivalayam) November 19, 2019
”முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம்” என பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தையுடன் குழுவாக சபரிமலைக்கு வந்தார். பம்பையில் சோதனை செய்த போலீசார் அந்த சிறுமிக்கு 12 வயது ஆவதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சிறுமியின் தந்தை மட்டும் கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர் மகளை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என மக்களவையில் கரூர் எம்.பி., ஜோதிமணி உருக்கமாக கூறினார். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் கருவிகள் நம் நாட்டில் இல்லை என்றும் ஜோதிமணி குறிப்பிட்டார்.
ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் . தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆன்-லைன் வாயிலாக, வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. சந்தானகுமாரின் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் என்றார். அதோடு, ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம், ஆனால் எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும் எனவும் கூறினார்.
ஹிட்லரின் தங்கை போல் கிரண்பேடி இருக்கிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, புதுச்சேரியில் விதிகளை மீறி நடக்கும், அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவில் சிறை செல்வர் முன்னாள் ராணுவ வீரர் உதவித்தொகை ரூ.6,000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஸ்வநாதன் கூறியதாவது, இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான். பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் என அவர் மேலும் கூறினார்.
புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைப்படி திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மலரட்டும்! என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்' என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி ரியல் தலைவராக திகழ்ந்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான முடிவுகளும் எடுக்க உள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சபரிமலையில் முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்,'' என்று தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார். நடை திறந்த முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 50 சதவீதம் அதிகம். காணிக்கை, அப்பம், அரவணை என எல்லா வகையிலும் வருமானம் அதிகரித்துள்ளது. காணிக்கையாக மட்டும் ஒரு கோடியே 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில் ஒரு கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights