Advertisment

Tamil Nadu News Highlights: மாநில தேர்தல் ஆணையர் இடமாற்றம்- மு.க. ஸ்டாலின் கண்டனம்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamil nadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today live updates

Tamil Nadu News Today live updates

Flash News in Tamilnadu Today Updates: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய, வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ் ' என்ற அமைப்பை உருவாகியது, நாடுகளிடையே பொருளாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின், 11வது கூட்டம், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது, உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளன, கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளன. உலக பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீத பங்களிப்பு செய்துள்ளன. பிரேசிலுக்கு சுற்றுலா அல்லது தொழில் துவங்க வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisment

அயோத்தி வழக்கில் தீர்ர்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டலாம். இந்த நிலம் மற்றும் கோவிலை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்' என்று கூறியது. அதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தினேஷ் கூறியதாவது:புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையில், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம்பெற வேண்டும். குஜராத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோவிலுக்கான அறக்கட்டளை உருவாக்கியபோதும், அப்போது மத்திய அமைச்சராக இருந்தவர் அதில் இடம்பெற்றிருந்தார்.ராம ஜென்மபூமி நியாஸ் வடிவமைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், புதிய கோவில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:52 (IST)14 Nov 2019

    அரசு மருத்துவர்களுக்கு ஒருவாரத்தில் இனிப்பான செய்தி - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

    அறந்தாங்கியில் ஸ்கேன் மையத்தை திறந்துவைத்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: அரசு மருத்துவர்களுக்கு ஒருவார காலத்திற்குள் இனிப்பான செய்தி வழங்கப்படும். அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பான கோரிக்கை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

    21:07 (IST)14 Nov 2019

    பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி

    பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும். உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே உள்ளது. அண்மையில் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை தொடங்கினோம். உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

    20:38 (IST)14 Nov 2019

    விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் ஆட்சியருக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பதவியா? - ஸ்டாலின் கேள்வி

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாகப் பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

    உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமி திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது - மு.க.ஸ்டாலின்

    20:01 (IST)14 Nov 2019

    மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம். தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை இணை ஆணையர் கோவிந்த்ராவ் தஞ்சை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    19:17 (IST)14 Nov 2019

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம்நாளை தீர்ப்பு வழங்குகிறது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    17:57 (IST)14 Nov 2019

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் சபரிமலைக்கு செல்ல 56 பெண்கள் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் வயது பெண்கள் செல்வது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மறு ஆய்வு மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின் சபரிமலைக்கு செல்ல 56 பெண்கள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

    17:33 (IST)14 Nov 2019

    தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உள்ளது - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். முதல்வர் பழனிசாமி என்னை பற்றி பேசியது அவரது கருத்து; தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது.தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன். ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும்.

    17:05 (IST)14 Nov 2019

    ரஃபேல் விவகாரம் - அமித் ஷா கருத்து

    ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுசீராய்வு மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு ரஃபேல் குறித்து ஆதாரமற்ற தகவல்கலை பரப்பியவர்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என அமித் ஷா அறிவித்துள்ளார். மோடி அரசு வெளிப்படையானது, அது ஊழலற்றது என்று நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    16:32 (IST)14 Nov 2019

    அதிமுகவுடன் கூட்டணி தொடரும்

    உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவின் கூட்டணி தொடரும் என காஞ்சிபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

    16:23 (IST)14 Nov 2019

    ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகனை சந்திக்க குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர் 7 பேர். முருகன் தற்போது உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களுக்கு அனுமதி அளிக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    16:21 (IST)14 Nov 2019

    சங்கத்தமிழன் படத்தை திருநெல்வேலியில் திரையிட தடை

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 21ம் தேதி வரை வெளியிட நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லிப்ரா நிறுவனத்துக்கு எதிராக விக்னேஷ்வரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    15:54 (IST)14 Nov 2019

    கல்வியறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல - பா. ரஞ்சித் கண்டனம்

    ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை தமிழக மாணவர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே நின்று போராடி வருகின்ற நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய கண்டன குரலை பதிவு செய்துள்ளார்.

    15:14 (IST)14 Nov 2019

    இரண்டு வயது குழந்தைகள் கூட செல்போன் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது - அமைச்சர் பாஸ்கரன்

    இரண்டு வயது குழந்தைகள் கூட சர்வசாதாரணமாய் செல்போன் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித்தரும் பெற்றோர்கள், நல்ல விசயங்களுக்கு செல்போனை பயன்படுத்தவும் கற்றுத்தர வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

    14:50 (IST)14 Nov 2019

    சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் - விருப்பமனு தாக்கல் செய்த திமுகவினர்

    தியாகராயநகர் மேற்கு வட்ட திமுக அலுவலகத்தில் இன்று இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு மேயர் பதவிக்கான விருப்பமனு தாக்கல் செய்தார். அதில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் விருப்பமனு தாக்கல் செய்தார்.

    14:11 (IST)14 Nov 2019

    அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - முக அழகிரி

    தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவி வருவதாக ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கருத்தினை கூறி வருகின்றனர். இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் மகன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முக அழகிரி, அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று அறிவித்திருக்கிறார்.

    14:08 (IST)14 Nov 2019

    ஹீரோ படத்துக்கு இடைக்கால தடை

    ரூ. 10 கோடி கடனை திருப்பி தராததால் ஹீரோ படத்துக்கு தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நடுவர் நீதிமன்றம் இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வெளியிட்டது.

    13:55 (IST)14 Nov 2019

    ரஃபேல் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்

    ரஃபேல் தீர்ப்பு உண்மைக்கும் நேர்மைக்கும், மோடி அரசுக்கும் கிடைத்த மற்றொரு வெற்றி என சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களிடம் மன்னிப்ப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

    13:53 (IST)14 Nov 2019

    கனமழை

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பக்கங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது.

    13:52 (IST)14 Nov 2019

    சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணம் பேரதிர்ச்சி - முக ஸ்டாலின்

    கல்வி நிலையங்களை காவி மயமாக்குவதை தவிர்த்து தேசிய கொடியில் உள்ள வண்ணங்களை போல் அனைவரும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

    13:27 (IST)14 Nov 2019

    ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு – மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

    ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் நடந்த விசாரணைக்குப்பிறகு ஏ கே விஸ்வநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிபிஐயில் பணியாற்றியவரின் பணியாற்றியவரின் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:02 (IST)14 Nov 2019

    சபரிமலை சிறப்பு பேருந்துகள் நாளைமுதல் இயக்கம்

    கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி பிறக்க உள்ளதையொட்டி, சபரிமலை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர், இருமுடி கட்டி சபரிமலை சாஸ்தாவை வழிபட ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பில் சிறப்பு பேருந்துகள் நாளை ( நவம்பர் 15) முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து 55, திருச்சி - 2, மதுரை - 2, புதுச்சேரி - 2, தென்காசி - 3 பேருந்துகள் இயக்கப்படும் என SETC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:20 (IST)14 Nov 2019

    நாடாளுமன்ற கூட்டத்தொடர் – 16ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் துவங்க உள்ள நிலையில், 16ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

    11:44 (IST)14 Nov 2019

    ரஜினி, கமல் மீது காட்டமில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ரஜினி, கமல் மீது தமக்கு காட்டமில்லை ; ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படம் அச்சிடுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    11:32 (IST)14 Nov 2019

    கர்நாடகா : தகுதி நீக்க எம்எல்ஏக்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

    இந்த 17 எம்எல்ஏக்களில், 15 எம்எல்ஏக்கள், முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்

    11:14 (IST)14 Nov 2019

    அணை கட்ட கர்நாடகாவிற்கு கிரீன் சிக்னல் - தமிழக அரசின் மனு தள்ளுபடி

    தென்பெண்ணையாற்றின் கிளைநதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்ட தடையில்லை என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவில்லை என்ற தமிழக அரசின் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    11:11 (IST)14 Nov 2019

    தீர்ப்பு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம் - ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

    பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிக்கும்போது எதிர்காலத்தில் எச்சரிக்கை தேவை என்று ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

    11:02 (IST)14 Nov 2019

    ரபேல் வழக்கு - சீராய்வு மனு தள்ளுபடி

    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    11:01 (IST)14 Nov 2019

    நெகிழி மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

    நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் 10 லட்சம் மாணவர்களை கொண்டு கின்னஸ் சாதனை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    10:27 (IST)14 Nov 2019

    நேரு நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

    publive-imageமுன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    10:21 (IST)14 Nov 2019

    உள்ளாட்சி தேர்தல் – திமுக சார்பில் விருப்பமனு இன்றுமுதல் விநியோகம்

    உள்ளாட்சி தேர்தல், டிசம்பர் மாதத்தில் நடைபெற இருப்பது உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், திமுக சார்பில் இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு விநியோகம் (நவம்பர் 14) இன்று முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    09:45 (IST)14 Nov 2019

    சென்னையில் பெட்ரோல் விலை அதிகரிப்பு

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.34 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய தினம் பெட்ரோலின் விலை குறைந்த நிலையில் இன்று(நவ.,14 ல் )16 காசுகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

    09:44 (IST)14 Nov 2019

    டுவிட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம்- அமைச்சர் பாண்டியராஜன்

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, அமைச்சர் உதயகுமார் தலைமையில், தொடர் ஜோதி நடைபயணம், மதுரையில் துவங்கியது, இதில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''வரும் பொங்கல் பண்டிகைக்கு, அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வர, அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்,'' என்றார்.

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில் அந்த வழியாக வந்த ஆலப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவத்தில் மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணையில் பலியான மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவருபவர்கள் எனவும், நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது ரயில் மோதி பலியாகினர் போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான மாணவர்கள் கொடைக்கானல் சித்திக் ராஜா, நிலக்கோட்டை ராஜசேகர், ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி என தெரிகிறது.இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment