Tamil Nadu news today updates : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாகக் கருதப்படும் திமுகவும், அதிமுகவும் எப்போதும் போல இத்தேர்தலிலும் முனைப்பு காட்டி வருகிறார்கள். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருக்கும் நிலையில் திமுகவினரும் பல இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். குடியுரிமை சட்ட மசோதாவால் வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தொடர்கிறது. பதட்டமான சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மேகாலயா செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை பாலியல் வன்கொடுமைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி ஸ்மிரிதி ராணி புகார்.
Live Blog
Tamil Nadu news today updates, Chennai rains, TN politics, local body elections : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் தவிர்ப்பதற்காக பாஸ்ட் டேக் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பாஸ்ட் டேக் முறை டிசம்பர் 15 தேதி முதல் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டாயம் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்த நிலையில், பாஸ்ட் டேக் குறிச்சொற்கள் ஸ்டிக்கர்கள் பற்றாக்குறையால் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன்: ரஜினியின் தர்பார் வெளியீடு முடிந்து அரசியல் தர்பார் ஆரம்பமாகும்; இது உறுதி. கட்சி அறிவிப்பு, மக்கள் சந்திப்பு, மாநாடு, தேர்தல் அறிக்கை பற்றி ஒவ்வொரு கட்டமாக திட்டமிட்டு அறிவிப்பார். அரசியல் ரஜினி-கமல் இணைப்பு பற்றி தற்போதைய சூழலில் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சவுத் ஈஸ்டர் ரயில்வேயின் காரக்பூர் டிவிசன் வெள்யிட்டுள்ள செய்திக்குறிப்பில், போராட்டங்கள் காரணமாக, டிசம்பர் 14 ஆம் தேதி இயக்கப்பட இருந்த 1. ஹௌரா - திருப்பதி ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ், 2. திருப்பதி - ஹௌரா ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ், 3.ஹௌரா - எர்ணாக்குலம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், 4. ஹௌரா - எம்.ஜி.ஆர் சென்னை செண்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், 5. ஹௌரா - யெஸ்வந்த்பூர் துரந்த்தோ எக்ஸ்பிரஸ், 6.ஹௌரா - ஹைதராபாத் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் டிசம்பர் 16 ஆம் தேதி இயக்கப்பட இருந்த 7.ஹைதராபாத் - ஹௌரா ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அதனால்,
போராட்டத்தில் சிறார்களை தவறாக ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, காவல்துறை முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு: நகரத்தில் வாழும் பெண்களுக்கு இந்த சமூகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது என்ற பயம் உள்ளது. பெண்கள் தைரியமாக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.
முன்னாள் டிஜிபி ஜாங்கிட்: சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக திகழ்ந்து வருகிறது. சென்னையில் 3 லட்சத்துக்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனை பாராட்டுவதாக தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசு பல குழப்பங்களை செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறை செய்யவில்லை; இது மோசடி வேலை என்று விமர்சனம் செய்துள்ளார்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பேசிய பிரியங்கா காந்தி: இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நாள் தோறும் பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மோடி அரசின் தவறான நிர்வாகத்தில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்று கூறினார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி: மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; அதனால், இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் இல்லை மன்னிப்பு கேட்க என்று ராகுல் காந்தி இன்று காலை கூற அதற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சம்பித் பத்ரா என்ற எம்.பி. சாவர்க்கர் என்றால் வீரர் என்று பொருள். 100 முறை பிறந்தாலும் ராகுலால் சாவர்க்கர் ஆக முடியாது என்று கூறியுள்ளார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் ராகவா லாரன்ஸ் கூறிய கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. கமல் குறித்து அவர் தவறாக கூறிவிட்டதாக பலரும் கூற, தன்னுடைய விளக்கத்தை நேரில் சென்று கமலிடம் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் போது தாஜ் கோரமண்டலில் தங்கியிருந்த சச்சினுக்கு எல்போவ் கார்டினை மாற்ற ஒருவர் ஆலோசனை கூறியிருந்தார். அந்த ஆலோசனைக்கு பிறகு தன்னுடைய எல்போவ் கார்டின் வடிவத்தை மாற்றியதாகவும் அவரை தற்போது தேடிக் கொண்டிருப்பதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார் சச்சின்.
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019
ஒரு பொய்யை நூறுமுறை கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற கோயப்பல்ஸின் தத்துவத்தின் படி ஸ்டாலின் செயல்படுகிறார். ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கின்ற பட்சத்தில் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள புகையிலை விளம்பரங்களை தமிழக அரசு நீக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்
சென்னையில் நாளை #இந்தியா - #மேற்கிந்தியதீவுகள் #கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் #புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத விளம்பரங்களை #தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்#Cricket #IndiaVsWestIndies #INDvsWI #INDvWI #WestIndies #India #Tobacco #odi pic.twitter.com/s8JczND9zt
— Dr S RAMADOSS (@drramadoss) December 14, 2019
தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சையின் செங்கிப்பட்டி, வல்லம் வெட்டிக்காடு திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ம் தேதி கடைசி நாள் என்றும், மடிக்கணினி பெற தகுதியுள்ள மாணவர்கள் அதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வரும் 16 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளில் போதைப்பொருள் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1,300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்’ செய்து, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளின் கூட்டுமுயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 இந்தியர்கள், 2 நைஜீரியர்கள், அமெரிக்கா, இந்தோனேஷியாவை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தாலும், 2 வாரங்களுக்கு பிறகு மழை பெய்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights