தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் அதிமுக 13 இடங்களையும், திமுக 12 இடங்களையும், பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றின. நேரடித் தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்ற அதிமுக மறைமுகத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.வுக்கு 244 இடங்கள், அ.தி.மு.க.வுக்கு 214 இடங்கள் கிடைத்தன. 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. 2,099 இடங்களிலும், அ.தி.மு.க. 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, கரூர், தர்மபுரி, தூத்துக்குடி, தேனி, நாமக்கல், விருதுநகர், அரியலூர், கடலூர் ஆகிய 13 மாவட்ட பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. கூடுதல் உறுப்பினர்களை பெற்றது. தி.மு.க.வுக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் கூடுதல் இடங்கள் கிடைத்தன. சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் சம அளவில் உறுப்பினர்களை பெற்றன.
இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் உள்ள 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் 26 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் அதிமுக அணி 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களிலும், திமுக 135 இடங்களிலும் வெற்றி பெற்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.