/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-28T162717.197.jpg)
செந்தில் பாலாஜி வழக்கில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்; வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை – காவல்துறை
செந்தில் பாலாஜி வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த குற்றப்பத்திரிக்கையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான நடைமுறைகளை தொடர அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.