/indian-express-tamil/media/media_files/2025/10/09/eps-tvk-2025-10-09-07-46-13.jpg)
'பெரிய கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு': த.வெ.க கொடிகளை சுட்டிக்காட்டி இ.பி.எஸ் பேச்சு
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நேற்று அவர் பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள், அ.தி.மு.கவின் கொடிகளுடன் சேர்ந்து த.வெ.க கொடிகளையும் கையில் ஏந்தி அசைத்தபடி இருந்தனர். இதனை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.
"வெல்லும் கூட்டணி அ.தி.மு.க தலைமையிலானது"
தொடர்ந்து பேசிய எடப்பாடி, "தி.மு.க தலைமையில் அமைக்கின்ற கூட்டணி வலுவான கூட்டணி என ஸ்டாலின் எண்ணுகிறார். உண்மையா? அது வெற்றுக்கூட்டணி. வெல்லும் கூட்டணி என்பது அ.தி.மு.க தலைமையில் அமைகின்ற கூட்டணிதான். ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருக்கிறார். கூட்டணி தேவைதான், ஆனால் அ.தி.மு.க தலைமையில் அமைகின்ற கூட்டணி வலுவானதாக இருக்கும். அங்க பாருங்கள் கொடி பறக்கிறது (த.வெ.க கொடியைக் குறிப்பிட்டு), பிள்ளையார் சுழி போட்டாச்சு. எழுச்சி ஆரம்பம். நீங்க (ஸ்டாலின்) ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். அது கானல் நீராகத்தான் போகும்" என்றார்.
தொடர்ந்து ஆளுங்கட்சியை குற்றம்சாட்டிய அவர், "உங்க ஆட்சியில் மக்கள் கண்ட பலன் என்ன? துன்பம், துயரம், வேதனை இதைத்தானே மக்கள் கண்டார்கள். 53 மாத கால தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு என ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அ.தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டுப் பேசினார்.
முன்னதாக, கடந்த 6-ம் தேதி கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, த.வெ.க தலைவர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியானது. அப்போது, கூட்டணி குறித்தும் இருவரும் பேசியதாகவும், இதுதொடர்பான அடுத்தகட்ட அறிவிப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில்தான், குமாரபாளையம் பொதுக்கூட்டத்தில் த.வெ.க கொடிகள் பறந்ததையும், 'பிள்ளையார் சுழி போட்டாச்சு' என எடப்பாடி பழனிசாமி பேசியதையும் அரசியல் நோக்கர்கள் முக்கியமான கூட்டணி அறிவிப்பின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் கூட்டணி கணக்குகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.