/indian-express-tamil/media/media_files/2025/10/19/rain-2025-10-19-10-55-15.jpg)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்தடுத்து உருவாகும் வானிலை நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, பருவமழையை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் நிகழ்வாக, அக்டோபர் 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய ஆய்வுகளின்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி முன்கூட்டியே அக்டோபர் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, தெற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் இத்தகைய நிகழ்வுகள் மேற்கு, வடமேற்கு திசையில் நகரும்போது, அவை தமிழ்நாட்டிற்கு நல்ல மழையைக் கொடுப்பதாக இருக்கும்.
இந்த வானிலை நிகழ்வுகளின் காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை 'மிக கனமழைக்கு' வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றும், இது வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரமடையச் செய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே வேளையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியை ஒட்டிய கேரள-கர்நாடக கடற்கரையில் தற்போது நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் (அக்டோபர் 21) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.