நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் பெருமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் மலைக் கோவிலில் இருந்து அடிவாரத்திற்கு திரும்பிய நிலையில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை உச்சியில் சிக்கி கொண்டனர். அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீரோடைப் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு சாதனங்களுடன் சென்று, கயிறு கட்டி மலைப் பகுதியில் சிக்கியிருந்த 22 பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மீதியிருக்கும் பக்தர்களையும் படிப்படியாக மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள், மலைக் கோவிலில் சிக்கி தங்கியிருக்கும் பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இன்று காலையிலிருந்து தற்போது வரை வத்திராயிருப்பு, தாணிப்பாறை மற்றும் மலைப் பகுதிகளில் விட்டு,விட்டு மழை பெய்து வருவதால், பக்தர்களை மீட்கும் பணிகள் தாமதமாகி வருகிறது. இன்று மதியம் 3 மணிக்கு மேல் மழை பெய்வது குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருப்பதால், மழை குறைந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பாலும் இன்று மாலைக்குள், மலைக் கோவிலில் சிக்கியிருக்கும் பிற பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil