/indian-express-tamil/media/media_files/eZ3NdaMaOPgkHIK9XsNX.jpg)
ரேஷன் கடைகளில் ப்ளு டூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக ஏற்படும் கால தாமதத்தால் பொருட்கள் விநியோகிப்பதில் பொதுமக்களின் கடும் அதிருப்தியையும், விரோதத்தையும் விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது என்றும், இதை கண்டித்து ஜூலை மாதம் 14ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ப்ளு டூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக ஏற்படும் கால தாமதத்தால் பொருட்கள் விநியோகிப்பதில் பொதுமக்களின் கடும் அதிருப்தியையும், விரோதத்தையும் விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது. இது அரசுக்கும் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
ஒரு வார காலத்திற்குள் பொது விநியோகம் சீராக நடைபெறும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தவறினால் எதிர்வரும் 27.06.2025ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும், தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் எதிர்வரும் 14.07.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் சங்கப் பணியாளர்களும், அங்காடிப் பணியாளர்களும் முழு அளவில் கலந்து கொள்வார்கள்.
நியாய விலைக்கடைகளில் தற்பொழுது புளூடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்திட குறைந்த பட்சம் 8 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் மோதல்போக்கு ஏற்படுவதுடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகிறது. இதனை களையும் பொருட்டு புளூடூத் முலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
தற்போது முழு நேர கடைகளுக்கு மேம்படுத்தப்பட்ட POS இயந்திரம் வழங்கப்பட்டும், பகுதி நேர கடைகளுக்கு பழைய POS இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது. பழைய POS இயந்திரத்தில் கை விரல் ரேகை பதிவின் மூலம் விற்பனையை மேற்கொள்ள முடிவதில்லை, கருவிழி பதிவின் மூலம் மட்டுமே விற்பனையை மேற்கொள்ள முடிகிறது. கை விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு ஆகிய இரண்டு முறைகளின் மூலமும் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நியாய விலைக்கடை பணியாளர்களில் 40 சதவீதம் மகளிரும், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளும் பணிபுரிகின்றனர். எனவே நியாய விலைக்கடைகளில் உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும் அது வரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
விடுமுறை நாளில் நகர்வு பணி மேற்கொள்ள கூடாது என்று அரசாணை மற்றும் பதிவாளர் சுற்றறிக்கை இருந்தும் பெரும்பாலான மாவட்டங்களில் மண்டல இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் ஆகியோரின் இசைவுடன் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மூலம் விற்பனையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு நகர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.
விற்பனையாளர்கள் மாவட்ட தேர்வாணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும் பொழுது பணிமூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயர்வுக்கு இதே பணி மூப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதவி உயர்வில் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால் பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும்.
மாவட்டத் தேர்வாணைக்குழு மூலம் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தொலைவில் பணியமர்த்தப்பட்டு குறைவான சம்பளத்தில் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அருகமைந்த சங்கங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்து கொடுக்க தக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன் கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.