உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கும் ஒமிக்ரான் மாறுபாடு, இந்தியாவிலும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 236 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லியில் தான் அதிக எண்ணிக்கையிலான ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இன்று, தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3வது இடத்தில் உள்ளது
இதுகுறித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 3பேர் தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், ஒருவர் கேரளாவில் இருந்து வந்தவர். மற்ற 30 பேரும், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆகும்.
சென்னையில் 26 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், சேலத்தில் ஒருவரும், மதுரையில் 4 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடு பயணிகளிடம் ஒமிக்ரான் அதிகளவில் தென்படுவதால், விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
ஏற்கனவே, தமிழ்நாட்டிற்கு நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. அப்போது, அவருடன் தொடர்பிலிருந்த 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil