விமான நிலையத்தில் இருந்து முகலிவாக்கம் செல்லும் பயணத்தின் போது பல இடங்களில் நிறுத்துமாறு கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கால் டாக்சி ஓட்டுநரை தாக்கியதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஊடக ஆலோசகர் மீது திங்கள்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவியின் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் ஆலோசகர் எஸ் திருஞான சம்பந்தம் மீது டிரைவர் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்: உப்புமா கதை சொல்லி பா.ஜ.க-வை சீண்டிய திருச்சி சிவா… கலகலனு சிரித்த ராஜ்ய சபா உறுப்பினர்கள்!
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஆப் மூலம் பயணத்தை பதிவு செய்த திருஞான சம்பந்தத்தை கேப் டிரைவர் திருநாவுக்கரசு (23) விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்தார். திருஞான சம்பந்தம் பயணத்தின்போது ஓரிரு இடங்களில் நிறுத்தச் சொல்லி, பயண நேரத்தை நீட்டித்ததாகக் கூறப்படுகிறது, இது ஓட்டுநருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
வாக்குவாதத்தின்போது திருஞான சம்பந்தம் அவரை சரமாரியாக தாக்கியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சமூக சேவை பதிவேடு (CSR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரைவர் திருநாவுக்கரசு, அந்த அதிகாரி மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், “பயணத்தின் போது சில நண்பர்களைச் சந்திக்க விரும்புவதாகவும், எனவே 10 நிமிடங்கள் காத்திருக்கவும் சொன்னார். நான் அவரிடம் அடுத்த பயணம் இருப்பதாகச் சொன்னேன், மேலும் பயணத்தை நிறுத்துமாறும், அந்த நிறுத்தம் வரை காட்டப்படும் தொகையை செலுத்துமாறும் கேட்டுக் கொண்டேன். அதற்குப் பதிலளித்த அவர், அவர் ஒரு பெரிய அதிகாரி, சக்தி வாய்ந்தவர் எனக் கூறினார்” என்றும் அந்த டிரைவர் கூறினார்.
திருநாவுக்கரசு மேலும் கூறுகையில், “நான் காரை நிறுத்திவிட்டு மேற்கொண்டு பயணிக்க மறுத்தபோது, அவர் இறங்கி என் முகத்தில் இரண்டு முறை அறைந்தார், நான் வீடியோ எடுக்கத் தொடங்கியபோது, அவர் எனது தொலைபேசியை உடைக்க முயன்றார். என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு (கண்ட்ரோல் ரூம்) போன் செய்தேன், அவர்கள் வந்தவுடனே, என்னுடைய போனைப் பிடுங்கிக் கொண்டனர், இதுவரை என்னிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. நான் புகார் அளித்தேன், ஆனால் அவர்கள் அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், திருஞான சம்பந்தத்தை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil