/indian-express-tamil/media/media_files/2025/08/20/tamil-nadu-army-soldier-2025-08-20-18-12-40.jpg)
பாக்., ட்ரோன்களை வீழ்த்திய சிவகங்கை வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிப்பு
பாகிஸ்தான் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கந்தனுக்கு, அவரது வீரச் செயலுக்காக தங்கப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவை இலக்காகக் கொண்டு எல்லைப் பகுதியில் ஏராளமான ட்ரோன்களை அனுப்பி உளவு பார்த்தது.
அப்போது, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கந்தன் (வயது 48), இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன்களைத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தி செயலிழக்கச் செய்தார்.
கந்தனின் இந்த வீரமிக்க செயல் நாட்டிற்குப் பெருமை சேர்த்தது. அவரது வீரத்தைக் கெளரவிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
தற்போது ராஜஸ்தானில் பணியாற்றி வரும் வீரர் கந்தனின் குடும்பத்தினர் காரைக்குடியில் வசித்து வருகின்றனர். அவரது சகோதரர் தர்மலிங்கமும் இந்திய ராணுவத்தில் வீரராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தங்கப் பதக்கம் பெற்ற ராணுவ வீரர் கந்தனை, அவரது சொந்த ஊரான குறிச்சி கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.