சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 7,800 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
சென்னை பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நகரில் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 141 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுத் திறனை மேம்படுத்த மாநகராட்சி ரூ.2.34 கோடியை ஒதுக்கியது.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மார்ச் 1-ம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வீடு வீடாக மாணவர் சேர்க்கை நடந்தது. ஏப்ரல் மாத இறுதியில் 13 ஆயிரத்து 800 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.
"கடந்தாண்டு நாங்கள் 6,000 மாணவர்களைச் சேர்த்தோம். தற்போதைய நிலவரப்படி, 13 ஆயிரத்து 800 பேரை சேர்த்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட இரு மடங்காகும். ஜூன் மாத இறுதிக்குள், இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டக்கூடும்" என்று நிலைக் குழு (கல்வி) தலைவர் டி.விஸ்வநாதன் கூறினார்.
141 பள்ளிகளுக்கும் தலா ஒரு தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார். நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.18,000 வழங்கப்படும்.