கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உயர்க்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி என மூன்று தமிழக அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்பழகன், செல்லூர் ராஜு இருவரும் சென்னையில் உள்ள மியோட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்கமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இன்று மாலை வரை செல்லூர் ராஜு , தங்கமணி, கே.பி அன்பழகன் உடல் நலம் குறித்து எந்தவிட மருத்துவ அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வெளியிடவில்லை. இது, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று மாலை அமைச்சர் கே.பி அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கோவிட்-19ல் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் தனி அறையில் உள்ளார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தது.
மனைவி ஜெயந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் செல்லூர் ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு, மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களின் உடல் நிலை குறித்த அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.
கொரோனா பாதிப்பிற்குள்ளான எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் இதுவரை 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில், இரண்டு எம்எல்ஏ- க்கள் தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள்
ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகரன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன்
திமுக எம்எல்ஏக்கள்
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (மறைவு), ரிஷவந்தியம் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி அரசு, செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான்.
அம்மன் அர்ஜூனன், சதன் பிரபாகரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சிகிச்சை முடிவடைந்த நிலையில் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.