TN Weather: தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருப்பத்தூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் (15.11.2022) சனிக்கிழமை (19.11.2022) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனால் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வரும் நவம்பர் 19ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை படிப்படியாக தீவிரமடையும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
(16.11.2022 மற்றும் 17.11.2022) தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(18.11.2022) அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(19.11.2022) அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil