Tamil Nadu Weather, 21nd November: தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த கட்டமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வழியாக ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சேலம், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 21ஆம் தேதி) மதியத்திற்கு மேல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது அடுத்த நாள் காலை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.
மேலும், தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றின் வேகம் 30-40 கிலோமீட்டர் அளவில் வீசக்கூடும்.
தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மழையால் முதலில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவுக்கு மேல், தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 22ஆம் தேதியன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23 முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்று (நவம்பர் 21ஆம் தேதி) மற்றும் நவம்பர் 22 ஆம் தேதி அன்று ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக- புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் (நவம்பர் 22ஆம் தேதி) காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil