பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை பேருந்திற்காக காத்திருந்த 37 வயது பெண் கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Police: Woman gangraped in Bengaluru, 2 held
பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பி தயானந்தா செவ்வாய்க்கிழமை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். "இந்தப் புகார் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பானது" என்று ஆணையர் கூறினார்.
அந்த பெண் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், கே.ஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள பரபரப்பான குடோன் தெரு அருகே யெலஹங்கா பேருந்துக்காகக் காத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பேருந்துகள் வருமா என்று கேட்டதற்கு, அவர்கள் பஸ் ஸ்டாப் வேறு இடத்தில் இருப்பதாகக் கூறி, குடோன் தெருவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அந்தப் பெண் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது மொபைல் போன், நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை குற்றவாளிகள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்கள் கே.ஆர் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.