தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் ஆண்டுக்கான மாநிலத்தின் வருடாந்திர கடன் திட்டத்தை (ACP) திங்களன்று வெளியிட்டார். இத்திட்டத்தின் இலக்கு ரூ.9 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்பாடு செய்த 182-வது மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) கூட்டத்தில் தங்கம் தென்னரசு வருடாந்திர கடன் திட்டத்தை வெளியிட்டார். முன்னுரிமைத் துறை கடனுக்காக ரூ.9,00,181 கோடி வருடாந்திர கடன் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2024-25ஐ விட 21.12% வளர்ச்சியை கொண்டிருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உரையில் விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்ற முன்னுரிமை துறைகளில் மற்றும் அரசு ஆதரவு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு வங்கிகள் காட்டிய முன்முயற்சிகளை தங்கம் தென்னரசு பாராட்டினார். மாநிலத்தின் கடன்-வைப்பு விகிதம் 126%ஆக இருப்பது நாட்டில் சிறந்த ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
2025-26 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட இலக்கை அடைய அனைத்து வங்கிகளும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார். மார்ச் 2025-ல் முடிந்த நிதியாண்டில் நிதி உள்ளடக்கம் மற்றும் முன்னுரிமை துறையில் கடன் வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளருமான மோகன் விளக்கக்காட்சியை அளித்தார்.
முன்னுரிமைத் துறை கடன்கள் மார்ச் 2024 நிலவரப்படி ரூ.6,63,993.27 கோடியிலிருந்து மார்ச் 2025 நிலவரப்படி ரூ.7,43,194.33 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.93% வளர்ச்சியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.