சித்திரை முதல்நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சோபகிருது ஆண்டு நிறைவு பெற்று ஸ்ரீகுரோதி ஆண்டு பிறந்துள்ள நிலையில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
கோயிலுக்கு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கோயில் வெளிப்பிரகார பகுதி வழியாக காவல்துறை சோதனைக்கு பிறகே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தமிழ்ப்புத்தாண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான, வளமான ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவரும் மீனாட்சியம்மனை தரிசித்தனர்.
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மீனாட்சியம்மனுக்கு வைர கீரிடம், முத்துமாலை, தங்கப்பாவாடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதேபோல சுந்தரேஸ்வரர் வைர, வைடூரிய ஆபரணங்களுடன், வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டு அருள்பாலித்து வருகிறார்.
தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர். இதேபோல் மதுரை சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், அழகர்கோயில் , திருப்பரங்குன்றம் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் இன்று தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.