DMK Leader Stalin Announced Protest : இந்தியாவில் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிப்ரவரி 22-ந் தேதி ஆர்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தினந்தோறும் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்த பெட்ரோல் டீசல் விலை, கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக விலை ஏற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் அதன்பிறகு ஜூலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தை காண்பித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/petrol-1.jpg)
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மாறாக பெட்ரோல் டீசல் மீதான கலால் மற்றும் வேளாண் வரிகள் உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என தகவல் வெளியான நிலையில், இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு இந்த வரி உயர்வினால் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசின் இந்த பேச்சுக்கு எதிர்பதமாக பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ 91.68, டீசல் விலை ரூ 85.01 ஆக விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவையான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டுவருவதால், இல்லத்தரசிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/petrol2.jpg)
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் வரும் 22-ந் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அ.தி.மு.க. பா.ஜ.க. அரசுகளைக் கண்டித்தும் கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க.வின் சார்பில் பிப்ரவரி 22-ந்தேதி (திங்கள்கிழமை) அன்று காலை 9 மணி அளவில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கழக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மகளிர், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும். அனைவரையும் தி.மு.க.வின் சார்பில் அழைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"