Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்!
அரசு பள்ளிகளில் படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், 25ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம். மேலும், https://penkalvi.tn.gov.in என்ற என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம்.
பதிவு செய்வதற்கு, மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவை என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டது!
அதிமுகவில் அனைத்து பதவிகளும் ஐந்து ஆண்டு காலம் தான். அதன்படி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. பன்னீர்செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டதால் தற்போது அவைத்தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் என சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி!
மகாராஷ்டிர அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கிளம்பியுள்ள நிலையில், மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளும் எம்.வி.ஏ.வை காப்பாற்றவும், சிவசேனாவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் போராடி வருகிறார்.
தற்போது அக்கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தலைவர் ஏக்நாத் ஷிண்டே, விதான் பவனில் உள்ள மாநிலங்களவைச் செயலகம் மற்றும் ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை போராட்டத்தை முன்னெடுத்தார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
டிஎன்பிஎல் போட்டிகளில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது
பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு என்று சொல்லமாட்டோம். பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என சென்னை கருத்தரங்கில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்
கோவையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல் தெரியவந்துள்ளது
ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும். ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த மாவட்ட பதிவாளர் மற்றும் சார்பதிவாளருக்கு எதிரான புகார் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.க்கு, நடவடிக்கை எடுக்காமல் ஓராண்டாக தூங்கிக் கொண்டிருக்கிறார் பதிவுத்துறை ஐ.ஜி என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், குடியரசு தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ளார்
தமிழக அரசின் தாய் – சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெண்டரை நிராகரித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக, சப்ளை நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது
திறந்து கிடக்கும் கால்வாய்கள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் கட்சியான சிவசேனாவில் விலகி எதிரணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சட்டமன்ற துணை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, சாலைகளில் இடையூறாக நிற்கும் வாகனங்கள், கட்டுமானப்பொருட்களை போலீசார் அகற்றி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கேஷ் டெபாசிட் மிசின்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நெல்லை – செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழக அணிகளை உள்ளடக்கிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக்கம் அணி பேட்டிங் செய்து வருகிறது.
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை ஆகஸ்ட் 8 வரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து ரூ.1,678 கோடிக்கு முதலீடுகளை பெற்று மோசடி செய்த வழக்கில், டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்கும் பணியை மேற்கொள்ள தமிழக உள்துறை செயலாளரை நியமித்தும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததால் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரையில் நடைபெற உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பங்கேற்க உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் சி.வி.சண்முகம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
“அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம்தான் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்” என்று அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்கான கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் ஜூலை 1ல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் குயின்ஸ்லேண்ட் பூங்கா நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்க்கப்பட்டுள்ளது. ரூ.200 கோடி மதிப்பிலான 32 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“மண்டல் பரிந்துரையை நடைமுறைப் படுத்துவதற்காகவே தனது ஆட்சியதிகாரத்தை, ஃபாசிச பாஜகவினரின் இந்து விரோதப் போக்கால் பறிகொடுத்தவர்” என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
அதிமுக கட்சியில் ஓ.பி.எஸ்-க்கு எதிரான ஆதரவு நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையில், டெல்லி சென்றிருந்த ஓ.பி.எஸ். பயணத்தை முடித்து கொண்டு சென்னை புறப்பட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயாக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கஞ்சா மட்டுமல்லாமல் குட்கா, மாவா பயன்பாடுகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 30 தமிழகத்தில் தான் இருக்கும். மாணவர்கள் தான் மாநிலத்தின் அறிவு சொத்துக்கள். படித்தோம், வேலையில் சேர்ந்தோம், சம்பாதித்தோம் என இருந்துவிட கூடாது. எத்தகைய ஆற்றலோடு செயல்படுகிறீர்கள் என்பதுதான் முக்கியம் என கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. தூங்குபவரை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. ஓபிஎஸ் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவி வருகிறது என பேசினார்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி இணையத்தை பார்த்து அறியும் சூழல் தற்போது உள்ளது.
குழந்தை நடிகர்களுக்கான வரைவு வழிகாட்டுதலை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் படத் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும், வழிகாட்டுதல்களை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என எச்சரித்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான 444 சப்இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (25) நடக்கிகிறது. தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களுக்குட்பட்ட 197 இடங்களில் தேர்வு நடக்கிறது. 2.21 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 15,940 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 12, 425 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
அமெரிக்காவில், 50 ஆண்டு கால கருக்கலைப்பு உரிமை சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதன்மூலம் கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என 1973ம் ஆண்டு அளித்த தீர்ப்பை ரத்தானது.
டிஎன்பிஎல் இன்றைய போட்டியில், பிற்பகல் 3.15 மணிக்கு மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் இரவு 7.15 மணிக்கு சேலம் ஸ்பார்டன்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகின்றன.
நாமக்கலில் வரலாறு காணாத வகையில், முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 5.35-ஆக உள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.