Tamil News Today Updates : புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்களிடம் விளக்க, இன்று மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. சிறு தொழில்களுக்கு கடன் தர மறுக்கக் கூடாது என, வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். தளர்வுகளுடன் கூடிய 7-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு அளிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 31-ம் தேதி, வரை தொடரும் என விமானத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுவதால், அந்த நாட்களில் டாஸ்மாக் செயல்படாது என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தியாகத் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். தலைமைக்காவலர் முருகனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி வெடித்த விபத்தில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 9,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,50,209 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை ஆந்திராவில் 1,407 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 76,614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,074 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் இன்று 7,010 பேர் குணமடைந்தனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,51,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 99 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அமர்சிங் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 64. அமர்சிங் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் எதை கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது. தாய்மொழியில் கல்வி கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. மொழிப்பாடம் உணர்வுப்பூர்வமானது என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “இளைஞர்களின் விருபங்களை நிறைவேற்றும் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டில் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மனப்பாட முறையில் சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடருக்காக சிஎஸ்கே அணி சில நாட்களில் பயிற்சியை தொடங்க திட்டம்
ஐ.பி.எல் தொடரை சிறப்பாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களுக்கான பயிற்சியை அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.
ஈரோடு, கோவை, மதுரை பகுதிகளில் கொரோனா தொடர்பான சிகிச்சை மருத்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், உயர்தர மருந்துகளை விற்பனை செய்யும் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி வரை நீட்டித்து என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரளாவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கு பெட்டிகளில் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொண்டு வருகிறது.
பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக மதிய உணவு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுக்கு இணையான மானியத்தை தற்போது வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார் .
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த, Bewell தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அங்கீகாரம் ரத்து என தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.
அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகரின் முழக்கம் நாட்டு மக்கள் அனைவரையும் என்றென்றும் எழுச்சி கொள்ளச் செய்யும் என்று கூறியுள்ளார்
லோக்மான்ய திலகரின் நினைவு நாளை முன்னிட்டு, தில்லியில் மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகரின் முழக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை என்றார்.
பக்ரித் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாகத்தின் பெருமைகளை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும் இந்நாளில், அனைவருக்கும் பாடுபடவும், மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கைதான்.
முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்
தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை.
தேசியக் கொடியை மதிப்போம்;
திராவிடக் கொடியும் பிடிப்போம்.
#TNGovt #NewEducationPolicy #NEP2020 #தமிழ்— வைரமுத்து (@Vairamuthu) August 1, 2020
கோவை மாவட்டம் அன்னூரில் பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட, பாஜக உறுப்பினர் நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,38,870-லிருந்து 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,394-லிருந்து 10,95,647ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747-லிருந்து 36,511 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டோக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
”அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள். நியாயமான, இணக்கமான அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். சகோதரத்துவம் மற்றும் இரக்க மனப்பான்மை வளரட்டும்” என பிரதமர் மோடி தனது பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Eid Mubarak!
Greetings on Eid al-Adha. May this day inspire us to create a just, harmonious and inclusive society. May the spirit of brotherhood and compassion be furthered.
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights