கார்த்திகேயன், நந்திதா வெற்றி:
சென்னையில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் 2ஆவது சுற்றில் இந்திய சி பிரிவில் இடம் பெற்றிருந்த கார்த்திகேயன் வெற்றிப் பெற்றுள்ளார்.
மெக்சிகோ வீரருடன் மோதிய கார்த்திகேயன் 30ஆவது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். கார்த்திகேயன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அதேபோல் மகளிர் பிரிவில் இடம்பெற்றிருந்த நந்திதா வெற்றி பெற்றார். இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்திய அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது.
191 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Tamil News Latest Updates
டிஎன்பிஎல் கோவை அணி வெற்றி
டிஎன்பிஎல் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில், கோவை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 209 ரன்கள் இலக்குடன் ஆடிய கோவை அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை அடைந்து நெல்லை அணியை வீழ்த்தியது.
செஸ் ஒலிம்பியாட்.. முதல் சுற்றில் 6 இந்திய வீரர்கள் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இந்திய ஓபன் ‘பி’அணியில் விளையாடிய ரவுனக் சத்வாணிஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மகளிர் ‘சி’ பிரிவில், ஹாங்காங் அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்தது. ஈஷா கார்வதே, நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போடா உள்ளிட்டோர் 4 புள்ளிகளுடன் வெற்றி பெற்றனர்.
ஓபன் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி, தெற்கு சூடான் வீரர் அஜேக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் குப்தா, குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தமிழக வீரர் குகேஷ் அறிமுக போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இதுவரை 6 இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு 109 கிலோ எடையைத் தூக்கி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்றார்!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 2வது சுற்று ஆட்டத்தில் களமிறங்கிய உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய கார்ல்சன் 80வது நகர்த்தலில் உருகுவே வீரர் ஜார்ஜ் மேயரை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான அணியில், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், தீபக் சஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணை பதிவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க கோரிய ராஜகோபாலன் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2 ஆவது சுற்றில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் வெற்றி பெற்றுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற குறைந்த வயது வீராங்கனை ராண்டா சேடர் ஆவார்
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய தமிழக வீரர் பிரக்யானந்தா வெற்றி பெற்றார். கருப்பு நிறக் காய்களை கொண்டு விளையாடிய பிரக்யானந்தா 41ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
பி அணியில் விளையாடிய மற்றொரு தமிழக வீரரான அதிபன் பாஸ்கரனும் வெற்றி பெற்றார். பிரக்யானந்தா, எஸ்டோனியா வீரரை தோற்கடித்தார்.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் 61 கிலோ எடைப் பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலம் வென்றார்.
காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் மகாதேவ் சர்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றது இந்தியாவிற்கு நல்ல துவக்கம் என்று கூறியுள்ளார்.
பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு பிரான்சு நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ம் சுற்று ஆட்டம் தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் களமிறங்கும் நிலையில், நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் காண்கிறார்
சேலம், அம்பலவான சுவாமி கோயில் கல் மண்டபத்தை சீரமைக்க கோரிய வழக்கில் அரசின் உத்தரவாதத்தை ஏற்று 8 வாரங்களில் சீரமைத்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இபளு தூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கெத் மகாதேவ் சர்கர் 248 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான தனியார் பள்ளியில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது என
சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில், கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
இபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாட்சி ஜெயராமன் கலந்து கொள்கிற நிலையில், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்கிறார்.
கடந்த 2012ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நித்தியராஜ் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், இழப்பீட்டு தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினரிடம் வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயல். சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதில்லை; இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் ரூ. 692 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன்,ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்
சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மிக்காக நிபுணர் குழு அமைத்தனர்; ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வருவதாக தாயிடம் கல்லூரி மாணவி அடம்பிடித்துள்ளார். வீட்டிலேயே இருக்க தாய் அறிவுறுத்தியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இதில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
என்.எல்.சி. நிறுவனம், தற்போது பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட இல்லை. ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் 'கான்க்ளேவ் 2022' நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று மலையாளத்தில் உரையாற்றினார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை. குரங்கம்மை பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் கூறினார்.
திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்றது.
பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி தொடக்க ஆட்டத்தில், கானா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
அதேநேரம் மகளிர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. 155 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
வைகை அணை 66 அடியை எட்டிய நிலையில், கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி பகுதியில் மகா புண்ணிய சேத்திரம் கோயில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
புதுக்கோட்டையில், சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி காணப்பட்டது. அறிகுறி உடைய நபர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரிகள் மருத்துவ சோதனைக்காக சனிக்கிழமை பூனேவிற்கு அனுப்பப்பட உள்ளது.