/indian-express-tamil/media/media_files/pApbuuK2eFDEiYi1os8Q.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 210-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 13, 2024 21:13 IST
சிவகாசி பட்டாசு தொழில் பிரச்னை குறித்து நிதியமைச்சரை சந்தித்துப் பேச திட்டம் - எல். முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன்: “பட்டாசு ஆலையில் பணிபுரிவோருக்கு இ.எஸ்.ஐ காருடு, மருத்துவ வசதியுடன் பென்ஷனை பிரதமர் கொடுத்துள்ளார். பட்டாசு தொழில் பிரச்னைகளில் தொழிலாளர்களுடன் மத்திய அரசு முழுமையாக நிற்கிறது. சிவகாசி பட்டாசு தொழில் பிரச்னை குறித்து நிதியமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். சரவெடி தடையை நீக்க வழிவகை செய்யப்படும்” என்று கூறினார்.
-
Oct 13, 2024 20:41 IST
கால்வாய் தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தல் - அமைச்சர் தங்கம் தென்னரசு
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி: “கால்வாய் தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது; அணைகளின் நீர் திறப்பு விவரங்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கப்படும் மக்கலை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
-
Oct 13, 2024 20:04 IST
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
Oct 13, 2024 19:51 IST
வடகிழக்கு பருவமழை: தி.மு.க நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - தலைமைக் கழகம் அறிவுறுத்தல்
தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தி.மு.க நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் தி.மு.க-வும் துணையாக நிற்க வேண்டும். மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட தி.மு.க செயலாளர்கள் மற்றும் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
-
Oct 13, 2024 18:49 IST
கோவையில் 3 மணி நேரம் பெய்த கனமழை: வெள்ளக் காடானா முக்கிய சாலைகள்
கோவையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. வெள்ள நீரில் மூழ்கி வாகனங்கள் பழுதாகி சாலையிலேயே நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
-
Oct 13, 2024 17:24 IST
த.வெ.க மாநாடு - தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்
த.வெ.க மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
-
Oct 13, 2024 17:12 IST
கோவை மாவட்டத்தில் கனமழை
கோவை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
Oct 13, 2024 16:58 IST
வானிலை மைய தலைவர் பாலசந்திரன் பேட்டி
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15, 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்
-
Oct 13, 2024 16:54 IST
சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் - வானிலை மைய தலைவர் பாலசந்திரன்
சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்
-
Oct 13, 2024 16:01 IST
அக்டோபர் 15-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (அக்டோபர் 15) தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக். 21ல் பருவமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது
-
Oct 13, 2024 15:41 IST
யுவன் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு
கோவையில் நடந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சியில் போலீசார், ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்கள் சிலர் அத்துமீறி அரங்கிற்குள் சுவரேறி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி உள்ளே நுழைந்த இளைஞர்களை பவுன்சர்கள் மற்றும் போலீசார் வெளியே அனுப்பினர். இறுதியாக நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, கோவை மக்களுக்கும், பாதுகாப்பு வழங்கிய போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்
-
Oct 13, 2024 15:25 IST
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அருவியில் குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் நீர்வரத்து 8,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 13, 2024 15:04 IST
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 16ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Oct 13, 2024 14:11 IST
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது - உதயநிதி
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ-க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு பிரத்யேக உதவி எண் 1913 வழங்கப்பட்டுள்ளது; கட்டுப்பாட்டு அறையில் 150 பேர் 4 ஷிப்டக்களாக 24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். ‘தமிழ்நாடு அலர்ட்’என்ற புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது; அதனை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் மழை குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். 13,000 தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர்; மழைநீர் தேங்கினால் வெளியேற்ற 113 எண்ணிக்கையிலான 100 HP பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவு தண்ணீர் போன்ற பொருட்களை உறுதி செய்வார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Oct 13, 2024 13:50 IST
அயர்ன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் அருகே, அயர்ன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
-
Oct 13, 2024 13:27 IST
மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்
புதுக்கோட்டையில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், மழை பாதிப்புகளை புதுக்கோட்டை ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு செய்தார். மழைநீரில் இறங்கி பாதிப்புகளை பார்வையிட்ட ஆட்சியர் அருணா, பல்லவன் குளம், சாந்தநாதர் சாமி கோயில், பூ மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு செய்து, நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
-
Oct 13, 2024 13:25 IST
பருவமழையை எதிர்கொள்ள தயார் - உதயநிதி
பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. TN ALERT ஆப் மூலம் மழை பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். 1913 என்ற அவசர கால எண் மூலம் பாதிப்புகளை மக்கள் தெரிவிக்கலாம். முடிவடையாத மழைநீர் வடிகால்களை சுற்றி வேலி அமைக்கப்படும் என கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் துணை முதல்வர் உதயநிதி பேட்டி அளித்தார்
-
Oct 13, 2024 12:51 IST
பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்
-
Oct 13, 2024 12:24 IST
முரசொலி செல்வம் மறைவு - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்
முரசொலி செல்வம் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி, முதல்வர் ஸ்டாலினை கோபாலபுர இல்லத்தில் சந்தித்து பா.ஜ.க சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்
-
Oct 13, 2024 12:10 IST
திருவண்ணாமலையில் போலீசார் அதிரடி சோதனை
திருவண்ணாமலை கிரிவலப் பாதை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள சாமியார்களிடம் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்டவை உள்ளதா என போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
-
Oct 13, 2024 12:07 IST
கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஆய்வு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
-
Oct 13, 2024 11:47 IST
கலைஞர் பன்னாட்டு அரங்கம்
ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.
-
Oct 13, 2024 10:38 IST
கவரப்பேட்டையில் ரயில் போக்குவரத்து சீரானது
விபத்து நடந்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் விரைவு ரயில் போக்குவரத்து சீரானது
36 மணி நேர சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மறுமார்க்கத்திலும் மீண்டும் ரயில் சேவை துவங்கியது
சென்னையில் இருந்து 3 விரைவு ரயில்கள் அப்லைனில் ஆந்திரா நோக்கி இயக்கப்பட்டது
-
Oct 13, 2024 10:02 IST
ஜிப்லைன் பழுது - அமைச்சர் விளக்கம்
கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது என தவறான தகவல் பரப்புவதா? - ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அறிக்கை
"தனக்கு வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்றியதால் ஈபிஎஸ்க்கு கோபம். ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. பூங்காவில் உள்ள அனைத்து உபகரணங்களும் தரமானவையே என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
-
Oct 13, 2024 09:50 IST
கார்கே, ராகுல் கண்டனம்
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சூழல் முற்றிலும் சீர் குலைந்துள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.
-
Oct 13, 2024 09:13 IST
ரயில் விபத்து - எஃப்.ஐ.ஆர் தகவல்
ரயில் பயணிகளுக்கு ஆபத்தான வகையில் வேகமாக இயக்குதல், கவனக்குறைவு உள்ளிட்ட 4 பிரிவுகளில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கிரீன் சிக்னலை லோகோ பைலட்டிற்கு காட்ட அறையை விட்டு வெளியே வந்த போது விபத்து ஏற்பட்டதாக எப்.ஐ.ஆரில் தகவல் உள்ளது.
-
Oct 13, 2024 08:53 IST
பட்டினி குறியீடு- மோசமான நிலையில் இந்தியா
127 நாடுகள் கொண்ட உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியாவுகு 105-வது இடம். உலக பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது.
-
Oct 13, 2024 08:48 IST
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 13, 2024 08:26 IST
ரயில்வே ஆணையர் விசாரணை
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி 16,17-ம் தேதிகளில் விசாரணை நடத்த உள்ளார். பாக்மதி ரயில் லோகோ பைலட், கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர், தொழில்நுட்ப பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
-
Oct 13, 2024 08:25 IST
சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம்
கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் மார்க்கத்தில் புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.
விபத்து நடைபெற்ற மறு மார்க்கத்தில் தடம் புரண்டுள்ள ரயில் என்ஜினை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணி தீவிரம். விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய எஞ்சின் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு மறு மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.