அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியானது. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.. தமிழிசை
புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும். புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் திணிப்பதாக இல்லை. இன்னொரு மொழியை கற்பதால், தாய்மொழியை அவமதிப்பது ஆகாது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது புதிய கல்விக்கொள்கையின் நோக்கம். என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் புதன்கிழமை மேலும் 528 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 5,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு கொரோனாவுக்கு 2,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்பு
இலங்கையில் மக்கள் போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபட்ச சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரணில் விக்கிரமசிங்க அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்கிறார்.
கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் அதிபராக தொடர்ந்து செயல்படுவார். 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வாகி உள்ள திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியா வரலாறு படைத்துள்ளது. 1.3 பில்லியன் இந்தியர்கள் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் நேரத்தில், கிழக்கு இந்தியாவின் தொலைதூரப் பகுதியில் பிறந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் மகள் நம்முடைய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! ஸ்ரீமதி திரௌபதி முர்மு ஜிக்கு வாழ்த்துகள்” என்று பாதி வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
India scripts history. At a time when 1.3 billion Indians are marking Azadi Ka Amrit Mahotsav, a daughter of India hailing from a tribal community born in a remote part of eastern India has been elected our President! Congratulations to Smt. Droupadi Murmu Ji on this feat.
— Narendra Modi (@narendramodi) July 21, 2022
ஜனாதிபதி தேர்தலின் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவின் வெற்றியை உறுதி செய்தவுடன், திரௌபதி முர்முவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். “2022 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீமதி திரௌபதி முர்மு வெற்றி பெற்றதற்கு எனது சக குடிமக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். குடியரசின் 15வது ஜனாதிபதியாக அவர் அச்சமோ தயவோ இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராக செயல்படுவார் என இந்தியா நம்புகிறது” என்று யஷ்வந்த் சின்ஹா ட்வீட் செய்துள்ளார்.
I join my fellow citizens in congratulating Smt Droupadi Murmu on her victory in the Presidential Election 2022. India hopes that as the 15th President of the Republic she functions as the Custodian of the Constitution without fear or favour. pic.twitter.com/0gG3pdvTor
— Yashwant Sinha (@YashwantSinha) July 21, 2022
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வாக உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தேர்வாகிறார்.
திரெளபதி முர்மு தற்போது வரை 53.12% வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். 50% வாக்குகளை கடந்ததால் திரௌபதி முர்மு தேர்வாகி இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வாகிறார். வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்மு இதுவரை 5,77,777 வாக்குகளை பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்குகளை தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் கண்டறிந்தனர்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் விலகி இருக்கப் போகிறோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வேட்பாளராக மார்க்ரெட் ஆல்வாவின் பெயரை ஆலோசிக்காமல் அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் செயல்பட தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16க்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் தடைவிதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால மனு ஆகஸ்ட் 16ம் தேதியும், பிரதான மனு செப்டம்பர் 1ம் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 பஞ்சாயத்துகளின் எல்.இ.டி. விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு என புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் 2ம் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
2வது சுற்று முடிவில், திரவுபதி முர்மு 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,89,000 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டது. தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்குகளை கண்டறிந்தனர்.
ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக அங்கீகரிக்க வேண்டாம் என மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு, ரவீந்திரநாத் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படாது என காவிரி மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளியில் ட்ரோன் கேமராக்கள் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்றில் NDA வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகிக்கிறார். எம்.பி.க்கள் அளித்த 748 வாக்குகளில் முர்மு 540 வாக்குகளும், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகளும் பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவை மீறி, மறு பிரேத பரிசோதனையின்போது எங்கள் தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே நடத்தி விட்டனர். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே வழக்கை முடிக்க கூடாது என மாணவியின் தந்த ராமலிங்கம் தரப்பில் கூறப்பட்டது.
அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுபடிதான் நடைபெற்றது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலனை செய்ய போவதில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறை முறையீடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மாணவி இறந்த தனியார் பள்ளியில் விடுதி நடத்த அனுமதி வாங்கவில்லை. முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு பிறகு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்
சிதம்பரம் கோயில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர். வரும் 25ம் தேதி ஆய்வுக்கு வர உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவித்த நிலையில் தீட்சிதர்கள் தற்போது கடிதம் எழுதியுள்ளனர்
அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளதால், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருத வேண்டாம் என நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தஞ்சை சரஸ்வதி மஹாலில் காணாமல் போன 200 ஆண்டுகள் பழமையான சரபோஜி, சிவாஜி ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை இந்தியா கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது
ரோடு சிறுமி கருமுட்டை விவகாரத்தில் தனியார் மருத்துவமனை உபகரணங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு . புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசு உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு. மாணவி இறந்த விவகாரம், கள்ளக்குறிச்சி வன்முறை உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல். போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்தும் ஆளுநரிடம் அண்ணாமலை முறையீடு என்று தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று இரவே உடல் அடக்கம் செய்யப்படும் என மாணவி தரப்பு வழக்கறிஞர் தகவல்.
கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தில் பெற்றோரின் மனு தள்ளுபடி. மறு பிரேத பரிசோதனை தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு. மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதி.
ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 500 கிராம் ஆவின் தயிர் ரூ.35 ஆகவும், 500 கிராம் ஆவின் நெய் ரூ. 290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். அவருக்கு, இலங்கை தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ. 37,040 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 4,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையின் அடுத்த அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர்ந்து பேரணி நடத்தினர். கடந்த வாரம் தாங்கள் முற்றுகையிட்ட ஜனாதிபதி இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, “ரணில் திரும்பிப் போ” என்று கோஷமிட்டனர். அவர் வியாழக்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்துவிட்டதால், அறை எண் 63-ல் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க தேர்தல் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி விசாரணை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி, அமலாக்க இயக்குனரகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அமலாக்க இயக்குனரகத்தின் நடவடிக்கையை “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று கூறிய காங்கிரஸ், இன்று நாடு தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியா விடை நிகழ்ச்சியில் பங்கேற்க, இபிஎஸ் நாளை டெல்லி செல்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11.30 மணியளவில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.
கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து கடந்த 18ம் தேதி அனுமதியின்றி விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மதுரையை தொடர்ந்து திண்டுக்கல்லிலும், ஜெயபாரத் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று நேரில் விசாரணை நடத்துகிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தகுதிச்சுற்றில் 59.60 மீட்டர் தூரம் எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளனர்.
இலங்கை மன்னார் கடற்பரப்பில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு, 2 நாளுக்கு முன்னதாகவே கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 17ஆம் தேதி கலவரம் நடந்த நிலையில், 15 ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் வரி ஏய்ப்பு புகாரில், கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.