Advertisment

Tamil News Highlights: பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு

Tamil news today, Tamil news live, Tamil news updates, Senthil Balaji: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
 bangaru adikalar died today due to heart attack

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 516-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil News Updates

பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு           

மாரடைப்பால் காலமான மேல்மருத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரகணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி



'அம்மா' பங்காரு அடிகளார் மறைந்ததில் ஆழ்ந்த வருத்தம். அவரின்   ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!

 

புதுச்சேரி முதல் அமைச்சர் என். ரங்கசாமி

”அம்மா” என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கிய ஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

மேல்மருவத்தூர் சித்தர் பீட கருவறையில் பெண்கள் அபிஷேக ஆராதனை செய்யலாம் என்பது மட்டுமல்லாது, அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபாடு செய்யலாம் என்கிற முறையை அமல்படுத்தியதன் மூலம், ஆன்மீகச் சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் பங்காரு அடிகளார் ஆவார். ஆன்மீக சேவையில் மட்டுமல்லாது, சித்தர் பீட அறக்கட்டளையின்மூலம் கல்வி மற்றும் சமூக சேவையினாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற அவரது இழப்பு, ஆன்மீக உலகத்திற்கும், அவரது பக்தர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தாருக்கும், சித்தர்பீட அன்பர்களுக்கும், அவரது பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து, அவரது ஆன்மா இளைப்பார எல்லாம்வல்ல அன்னை ஆதிபராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.

தெலங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவால் இன்று(19-10.2023) காலமானார் என்ற செய்தி பெரும் மனவருத்தத்தைத் தருகிறது.

பெண்கள் எல்லா நாட்களிலும் சிலையைத் தொட்டு வழிப்பாடு செய்யும்  முறையை அறிமுகப்படுத்தி பெண்களின் சமுதாய முன்னேற்றத்தில் பெரும் புரட்சியை செய்தவர். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள் நிறுவி ஆன்மிகம் மற்றும் சமூக சேவை ஆற்றியதன் மூலமாக கோடான கோடி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடைய இழப்பு ஆன்மீக, சமுதாய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தக் கூடும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நிர்வாகிகள், பக்த கோடிகள் அனைவரோடும் என்னுடைய வருத்தத்தையும் ஆறுதலையும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுராந்தகம் வருவாய் கோட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

பங்காரு அடிகளாரின் மறைவை தொடர்ந்து மதுராந்தகம் வருவாய் கோட்ட பள்ளிகளுக்கு நாளை (அக்.20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

“அனைத்து பெண்களும் கருவறைக்கு சென்று அவர்களே பூஜை செய்து வழிபட செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிக புரட்சி போற்றுதலுக்குரியது.

அவரது மறைவு செய்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதை உடன் நடைபெறும்” என தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் இரங்கல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவரும், மரியாதைக்குரிய சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

திரளாக பெண்கள் மேல்மருவத்தூர் சென்று வழிபட காரணமாக அனைத்து நாட்களிலும் பெண்களுக்கு கோவிலில் அனுமதியளித்து, ஆன்மீக புரட்சி செய்தவர். இந்திய அளவில்

ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். அவரது இழப்பு ஆன்மீகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் கலாச்சார அறக்கட்டளையைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறை தொண்டில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து பிரியாவிடை கண்ட அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வைகோ இரங்கல்

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (19.10.2023) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் அமைதிப் புரட்சியை ஆன்மீகத் துறையில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பங்காரு அடிகளார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியது.

ஆதிபராசக்தி சித்தர் பீடம் அந்தப் பகுதியில் அமைந்ததால் கல்வி, சமுதாயம், விவசாயம், வணிகம் என பல துறைகளிலும் முன்னேற்றம் நிலவியது.

பங்காரு அடிகளாரின் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2019 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியது.

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், செவ்வாடை தொண்டர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ஆன்மீக சேவை மட்டுமின்றி கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வந்தவர். தமது சேவைக்காக ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆன்மீகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும்   பங்காரு அடிகளார் தகர்த்தார். பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு.

பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது தான் தாம் அவதரித்ததன் நோக்கம் என்று பங்காரு அடிகளார் அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப மகளிர் முன்னேற்றம்  என்ற உன்னத நோக்கத்திற்காக அருள்திரு. பங்காரு அடிகளாரும்,  ஆதிபராசக்தி சித்தர் பீடமும்  ஆற்றிய  பணிகள் போற்றத் தக்கவை. இயற்கையை போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்ற பங்காரு அடிகளாரின் அறிவுரை ஆன்மிக எல்லையை தாண்டி அனைவருக்கும் பொதுவானது. அவரது அறிவுரை எவ்வளவு உண்மையானது என்பதை காலநிலை மாற்றம் என்ற பெயரில் இன்று நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.

அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்களின் கல்விப் பணியும் பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியில் தொடங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை & அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட அனைத்து புலங்களிலும் பட்டம் வழங்கும் கல்லூரிகள் வரை தரமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவை வழங்குதல், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க பொது மற்றும் பல் மருத்துவமனைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் என அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வாயிலாக அருள்திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மேற்கொண்ட பணிகள்அனைத்தும் பாராட்டத்தக்கவை.

பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி இராமதாஸ் இரங்கல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவும், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் முக்தி அடைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

பங்காரு அடிகளார் அவர்கள் என் மீது தனிப்பாசம் கொண்டவர். எனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். கடந்த சில வாரங்களுக்கு முன் பங்காரு அடிகளார் அவர்களை எனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். என்னையும், குடும்பத்தினரையும் வாழ்த்தி அனுப்பிய அவர், இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை; அவரது மறைவு செய்தியை நம்ப முடியவில்லை. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு ஆகும்.

பங்காரு என்றால் தங்கம் என்று பொருள். தமது பெயரின் பொருளுக்கு ஏற்ப தமது வாழ்நாளில் தங்கமான மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், உலகெங்கும் உள்ள பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்காரு அடிகள் மறைவு: ராமதாஸ் அஞ்சலி



மேல்மருவத்தூரில் உடல்நலக் குறைவால்  காலமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குரு  பங்காரு அடிகளாரின் உடல்  மேல்மருவத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பங்காரு அடிகளாரின் புதல்வர்கள் செந்தில் குமார், அன்பழகனுக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

எடப்பாடி பழனிசாமி இரங்கல்



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவை அறிந்த மிகுந்த வருத்தமுற்றேன்.

பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்ட அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பங்காரு அடிகளார் மரணம்: ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்



பங்காரு அடிகளார் மரணத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், “மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். 

ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள். உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பெருமைக்குரியவர் பங்காரு அடிகளார் அவர்கள். இவரது ஆன்மீகச் சேவையை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருதினை இவருக்கு வழங்கியது. இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது. இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. 

திரு. பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பங்காரு அடிகளார் மரணம்: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்



பங்காரு அடிகளார் மரணத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கருணாநிதி மீதும், மு.க. ஸ்டாலின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். 

மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆன்மிக பணிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்: பங்காரு அடிகளாருக்கு டி.டி.வி தினகரன் இரங்கல்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இது அவரது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

புதுச்சேரி: அமைச்சராக பங்கேற்ற பிரியங்கா

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் பிரியங்கா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று விழா ஒன்றில் அவர் அமைச்சராக பங்கேற்றுள்ளார். இதனால் அவர் அமைச்சராக உள்ளாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாளை ’செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை ஓட்டம்

இயற்கை இடர்பாடு குறித்து ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், ஒரே நேரத்தில் எச்சரிக்கை வழங்கும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இரு நாட்களுக்கு மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு இரு நாட்களுக்கு மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் தனிப்படை குழுவினர் சோதனை

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் தனிப்படை குழுவினர் சோதனையிட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தேவர் குருபூஜை; வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்க ஐகோர்ட் மறுப்பு

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. 2017ம் ஆண்டில் இருந்து வாடகை வாகனங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. 5 மாவட்டங்களில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது என அரசுத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது

ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது - வானிலை ஆய்வு மையம்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது அடுத்த 72 மணி நேரத்தில் தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை ஆய்வு மையம்

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், அது 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் சென்றார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக் வியாழக்கிழமை இஸ்ரேலில் தரையிறங்கினார், அவர் மற்ற பிராந்திய தலைநகரங்களுக்குச் செல்வதற்கு முன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திப்பார்.

லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களின் டூவிலர்களுக்கு அபராதம் விதிப்பு

குரோம்பேட்டை திரையரங்கில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்கள் இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி சென்றனர். நோ பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை, வாகனங்களில் போலீசார் வைத்துச் சென்றனர்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி சுற்றறிக்கை; முதல்வர் விளக்கம்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வெளியிட்டதாக வலம் வரும் சுற்றறிக்கை உண்மைக்கு புறம்பானது. ஆயுத பூஜை நிகழ்வுகளில் மதம் சார்ந்த சாமி படமோ, சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது என நேற்று சுற்றறிக்கை வெளியானது. சமூகவலைதளங்களில் வெளியான அறிக்கை கல்லூரி முதல்வர் வெளியிடவில்லை என மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிப்பு

லியோ பட திரையரங்கு முன் இளம் ஜோடி திருமணம்

விஜய் ரசிகர்களான இளம் ஜோடி, லியோ படம் வெளியான திரையரங்கில் மாலை மாற்றி திருமணம். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொண்ட இளம் ஜோடி,

 விஜய் முன்னிலையில் திருமணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை"- திருமணமான தம்பதி

லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் ரசிகர் விபரீத முயற்சி

கிருஷ்ணகிரி: லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், திரையரங்க சுவர் ஏறி குதித்த இளைஞரின் கால் முறிவு. டிக்கெட் கிடைக்காததால் வாக்குவாதம், விபரீத முயற்சியால் கால் எலும்பு முறிந்ததாக தகவல் 

தங்கம் விலை ரூ.200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ₨5,585க்கும், ஒரு சவரன் ரூ.44,680க்கும் விற்பனை

ஆர்.என்.ரவி டெல்லி பயணம் 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்

அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன்

மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அவதூறாக பதிவிட்டதாக அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன். பால்பண்ணை உரிமையாளர் வீட்டின் முன்  பெட்ரோல் குண்டு வீச்சு பற்றி X பக்கத்தில் அவதூறு பதிவு எனப் புகார். இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் நாளை செக்கானுரணி காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- இன்று தீர்ப்பு

அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜுன் 14-ம் தேதி கைதான  செந்தில் பாலாஜி  ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment