இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் பாதிப்பு எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக 8 ஆயிரத்தை நெருங்கி தொற்று பாதிப்பு நேற்று 8 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. இதனால் தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 9344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 9,80,728 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரு நாளில்,39 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகிய நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இன்று ஒரு நாளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 5263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,02,022 பேராக உயர்ந்துள்ளது. தற்போது 65,635 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய கொரோனா தொற்று பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில், 2884 பேருக்கும், செங்கல்பட்டில் 807 பேருக்கும், கோயம்புத்தூரில் 652 பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 248 பேருக்கும், மதுரையில் 235 பேருக்கும், ராணிப்பேட்டையில் 193 பேருக்கும், கடலூரில் 190 பேருக்கும், கன்னியாகுமரியில் 193 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 191 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.