/tamil-ie/media/media_files/uploads/2022/11/avvai-natarajan-1.jpg)
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான அவ்வை நடராஜன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 21) காலமானார். அவருக்கு வயது வயது 85.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி - லோகாம்பாள் ஆகியோருக்கு மகனாக 1936-ம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், முனைவர் பட்டம் பெற்றார்.
மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ஔவை நடராசன் பணியாற்றியவர்.
1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். 2014-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த அவ்வை நடராஜன் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை (நவம்பர் 21) மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 85.
தமிழறிஞரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.