பிரபல தமிழ் சீரியல் நடிகையாக இருந்த சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது நண்பர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. இதையடுத்து சித்ரா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் உள்பட 7 பேரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் ஓய்வுபெற்ற காவலருமான காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கமால் இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் சித்ரா உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.