/tamil-ie/media/media_files/uploads/2018/03/a44-4.jpg)
தமிழ்த்தாய் வாழ்த்தின் அசல்பாடலை பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தின் உள்ள அமைதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் கருத்து.
இது தொடர்பாக சென்னை புளியந்தோப்பை சேர்ந்த தமிழாசிரியரின் மகனும், ஆட்டோ ஓட்டுனருமான ராமபூபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தற்போது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவர் எழுதிய அசல் பாடலிலிருந்து பல பகுதிகள் நீக்கப்பட்ட பிறகே, தற்போது பாடப்பட்டு வரும் பாடலானது 1968 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு பாடலை திருத்துவது, மாற்றியமைப்பது, சிதைப்பது என்பது தமிழ் மொழியின் கலாச்சாரம், பாரம்பரிய வரலாறு மட்டுமல்லாமல் அதை சார்ந்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதனால் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைத்தான் பாடவேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 'கடந்த 50 ஆண்டுகளாக பாடப்பட்டு வரும் பாடலை அனைவரும் ஏற்று, மதித்து, மரியாதை செலுத்தி வருகின்றனர், அப்படியிருக்கும்போது மறுபடியும் முன்பிருந்த பாடலை கொண்டு வந்தால் அதற்கு எதிராக சிலர் போராடுவார்கள். எனவே இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது. மேலும் தற்போது தமிழகம் அமைதியாக உள்ளது அதனை குலைக்க நாங்கள் விரும்பவில்லை' என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.