Thiyya listed under BC only in GO : ஒருங்கிணைந்த மதறாஸ் மாகாணத்தில் பல மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒரே அளவில் தான் நடத்தப்பட்டார்கள். 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தாய்மொழி, தந்தை மொழி என்பதையெல்லாம் கடந்து வாழ்வாதாரத்தை வழங்கும் பகுதியில் மக்கள் வாழத் துவங்கினார்கள். கோவையில் அதிக அளவில் மலையாளிகள் இருப்பதையும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் சமூகத்தினர் வாழ்வதையும் நாம் பார்க்கின்றோம். மற்றொரு மாநிலத்தில் பிறந்து வளர்ந்து அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடுகளில் ஊறிவிட்ட, பிற மொழி பேசும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும்.
பெரியாரை கேரளாவிலுள்ள வைக்கம் வரைச் சென்று போராட்டம் நடத்தக் காரணமாக இருந்த மக்களின் உரிமைகள், அவரின் சொந்த மாநிலமான தமிழகத்தில் இன்று வரை முழுமையாக கிடைக்கவில்லை. முன்பு சாதிச் சான்றிதழுக்காக போராடி, இன்று இட ஒதுக்கீட்டிலும் நுழைவுத் தேர்விலும் பிரச்சனைகளை சந்திக்கும் நீலகிரி திய்யாக்களின் தொடர் போராட்டத்தை விவரிக்கிறது இக்கட்டுரை.
“அரசுப் பணிக்கு செல்ல திய்யா வகுப்பைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்புகிறார்கள். அரசு 2020ம் ஆண்டில் பி.சி.யில் இந்த பிரிவை இணைத்து அரசாணை வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் பி.சி. பட்டியலில் இம்மக்கள் இடம் பெறவில்லை” என்று கூறினார் பெயர் கூற விரும்பாத நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்.
அதுல்ய மிஷ்ரா குழுவும் பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரமும்
ஈழவர்-திய்யாக்கள் பிரிவினர், தென் தமிழகத்தில் இருப்பதைப் போன்றே, நீலகிரியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 7.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட மலை மாவட்டத்தில் இம்மக்கள் சுமார் 1.5 லட்சம் பேராக இருக்கலாம்.
1976ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் (எண் 58), தமிழகத்தில் இருக்கும் நபர்களுக்கும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்கப்பட்டும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரு இனத்தை சேர்ந்தவராயினும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர் எனில் அவர் பிற்படுத்தப்பட்டோராக கருதப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே ஆண்டில், தமிழக எல்லைக்கு வெளியே உள்ளனர் என்ற அடிப்படையில் மலபார் மாவட்டங்களான பொன்னானி, பாலக்காடு, வள்ளுவநாடு மற்றும் எர்நாடு திய்யாக்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கியது தமிழக அரசு.
1992ம் ஆண்டு முதல் ஈழவர் – திய்யா மக்களுக்கு சாதிச் சான்றுகள் வழங்கப்படுவதை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. தங்களின் குழந்தைகளுக்கு இதனால் எவ்விதமான சலுகைகளும் கிடைக்கவில்லை என்பதையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களின் சாதியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து வைத்து வந்தனர் .
வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஷ்ரா தலைமையிலான 4 நபர் குழு ஒன்றை அமைத்து, தமிழகத்தில் உள்ள ஈழவர்கள் மற்றும் திய்யாக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்க தேவையான புறக்காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக அரசு 2020ல் உத்தரவு பிறப்பித்தது.
கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, 2020ம் ஆண்டு திய்யா பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கியது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரியத்தின் செயலாளர் பி. சந்திரமோகன் அது தொடர்பான அரசாணையை (G.O 55) வெளியிட்டார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி சட்டம் (கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் வேலைகளில் இட ஒதுக்கீட்டு சட்டம்) 1993-த்தில் இடம் பெற்றுள்ள 3வது ஷரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி அன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பாணையில் (No.II(1)/BCMBCMW/36(a)/2008) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
மேற்கோள் காட்டப்பட்டுள்ள அறிவிப்பாணையில் உள்ள அட்டவணையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றிருக்கும் துணைப் பிரிவுகளில் (sub-heading I) 109க்கு அடுத்தபடியாக 109-A- வாக திய்யா வகுப்பு இடம் பெறும் என்று கூறப்பட்டிருந்தது.

யார் இந்த திய்யாக்கள்?
மத்திய மற்றும் வட கேரளத்தை தமிழகத்துடன் இணைக்கும் பல பகுதிகளில் கூடலூர் கணவாயும் ஒன்று. அங்கே வாழும் மக்கள் தீயர் என்று அழைக்கப்படுகின்றனர். ஈழவர் பிரிவில் முதன்மையானவர்கள் இவர்கள். வயநாட்டில் வாழும் மக்களை வயவர்கள் என்று குறிப்பிடுவதும் உண்டு. ஈழவர் சமூகத்தினரை வயவர் என்றும் பல நெடுங்காலமாக அம்மக்கள் அழைத்து வருகின்றனர் என்கிறது தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரனின் ஆராய்ச்சி.
கேரளம் மட்டுமின்றி தென்னிந்தியாவில் அவர்கள் பரவி உள்ளனர். கேரளத்தின் வடக்கு பகுதியான மலபாரில் வசிக்கும் இவர்கள் திய்யாக்கள் என்றும், தெற்கு கேரளத்தில் வசிக்கும் மக்கள் ஈழவர்கள் என்றும், தமிழகத்தில் இல்லத்துப் பிள்ளைமார்கள், நாடார்கள், வில்லவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துளு பகுதியில் பில்லவாக்கள் என்றும் ஆந்திரா – கர்நாடகா பகுதியில் இவர்கள் ஈடிகா என்றும் அழைக்கப்படுகின்றனர் என்கின்றனர் மானுடவியலாளர்கள். குமரி தமிழகத்தோடு இணைந்த பிறகு, குமரி, நெல்லை செங்கோட்டையில் இருக்கும் ஈழவர்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரத்தை முன்பே வழங்கியுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவிற்கு இது தலையாய கடமை
”திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருங்கிழவன் பெரியார், இந்த மண்ணில் எங்கள் வகுப்பினர் பட்ட துயரை கண்டு தான் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். வைக்கம் வீரர், பெரியாருக்கு தெரியும் இம்மண்ணில் திய்யாக்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்று. அவர் காட்டிய அறத்தின் வழியில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், முதல்வர் முக ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்” என்று கூறுகிறார் உதகையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன்.
இந்திய நாட்டின் குடிமகன் என்பதற்கு என்னிடம் சான்றுகள் இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, ரேஷன் அட்டை இருக்கிறது. ஆதார் தருகிறார்கள். திய்யா சமூகம் மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் சாதி சான்றிதழ் பெறுவதற்கு நாங்கள் சிரமப்பட்டோம். சாதியே இல்லை என்று நினைப்பவன் நான். சமூக ரீதியாக, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இட ஒதுக்கீடு உதவும் எனில் அது எங்களின் பிள்ளைகளுக்கும் தேவை என்று நினைக்கின்றோம்.

”தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில், வெளியான அரசாணை வெறும் கண் துடைப்போ என்ற கேள்வியை எழுப்புகிறது. பல தலைமுறைக்கு முன்பு தமிழகத்திற்கு நாங்கள் குடி பெயர்ந்தோம். நான் தமிழகத்தில் பிறந்தேன். பிறப்பால் நான் தமிழன் தானே? இன்று எங்கள் பிள்ளைகள் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, கலந்தாய்வுக்கு சென்றால் பி.சி. பட்டியலில் நாங்கள் இல்லை. தாய் மொழி என்ன? , பெற்றோர்கள் பூர்வீகம் எது? என கேட்கின்றனர். அரசின் அடையாள சான்றோடு நாங்கள் செல்கின்றோம். ஆனாலும் மீண்டும் மீண்டும் சோதிக்கப்படுகிறோம். நிர்வாக ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் எங்கள் குழந்தைகள். சமூக நீதி குறித்து தொடர்ந்து பேசும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு திய்யாக்களுக்கு பி.சி. அங்கீகாரத்தை முறையாக தருவதோடு டி.என்.பி.எஸ்.சி போன்ற தேர்வாணையங்களில் எங்களின் பிரிவு பி.சி.க்கு கீழ் இடம் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
நீட்டில் 505 மதிப்பெண்; தந்தையின் மரணம்; நிறைவேறுமா MBBS கனவு? முதல்வர் உதவியை நாடும் மாணவன்
அரசாணைக்கு மதிப்பே இல்லை
தமிழகத்தில் திய்யாக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் வெறும் காகித அளவில் நின்று விடுகிறது. இன்று வரை நீலகிரி பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான திய்யாக்கள் பணியாற்றுகின்றனர். பொள்ளாச்சி, பாலக்காட்டினை ஒட்டிய பகுதியில் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து திய்யாக்கள் இருக்கின்றனர். மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு தானே தமிழகமும் கேரளமும் உருவானது. அதற்கு முன்பு வரை அது மதராஸ் தானே என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் உன்னிக்கிருஷ்ணன்.

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலான யோஜனம் ஈழவ திய்யா பேரமைப்பின் பொதுச் செயலளாராக இருக்கும் அவர், “தமிழகத்தில் ஈழவர்கள், திய்யாக்களின் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிந்து கொள்ள விண்ணப்பித்தேன். ஆனால் அரசிடம் இது தொடர்பாக எந்த விதமான தரவுகளும் இல்லை என்று பதில் அனுப்பியுள்ளனர் ஒரு அரசிடமே எங்களைப் பற்றிய தரவுகள் இல்லாத பட்சத்தில் எங்களின் தேவைகள் என்ன என்று அறிந்து எப்படி திட்டங்களை வகுப்பார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
”சமூக, பொருளாதார ரீதியில் எங்கள் மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். அரசாணை 2020-ல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனால் எங்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை” என்றும் கூறுகிறார் உன்னிக்கிருஷ்ணன்.
இது குறித்து விளக்கம் பெற, தமிழக பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் தொலைபேசிக்கு தொடர்ப்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை
குரூப் 2, குரூப் 2ஏவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடக்கும் தேர்வுகளில் பங்கேற்போமா அல்லது பொதுப்பிரிவில் தான் போட்டியிட வேண்டுமா என்ற கேள்வியுடன் அரசின் பதிலுக்காக காத்திருக்கின்றனர் திய்யா வகுப்பு இளைஞர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil